Tuesday, December 29, 2009

மாயாழிகள்

இரவு தின்று
மிச்சமான
விளக்கு வெளிச்சம்
போதுமானதாய்
இருக்கிறது...

நீ படுத்திருக்கும்
திசையில் வாகாய்
காலை நீட்டி
உன் கொலுசை
கிளுக்கி எழுப்ப

கொஞ்சம்
சுவரதெரிப்பில்
புரண்டு படுக்கிறாய்
உன் கனவின்
துளையில் நுழைவதற்கு
தோதாய்

கைகளை மட்டும்
அனுப்பி
உன் உடம்பில்
பரத்தியிருக்கும்
வெப்ப பூக்களை
பறிக்கிறேன்
சில அமிலத்துளிகள்
தரையில் சிந்தி
கொப்பளிக்கிறது

மேசைக்காற்றாடி
மகுடிக்க
ஆடிய முடிக்கற்றைகள்
கருத்த நாகங்களுக்கு
ஒப்பாய்
உடலெங்கும் தீண்டி
உயிர் ஒழுக
பொத்தலாக்குகிறது

ஒவ்வொரு
பொத்தல்களில் இருந்தும்
வடிந்த உயிர்த்துளிகளில்
மிதந்து கரையேருகிறது
இரண்டு
புகைக்ச்சிற்பங்களுடன்
ஒரு
பெயரறியாப்படகு   

Thursday, November 19, 2009

அப்பா என்கிற அகழ்வு

பாரா எழுதிய ஒரு பதிவுக்கு பதிலி!

அன்பு பாரா,


எனக்கு இதை முழுதும் படிக்க முடியவில்லை, படிக்கவும் இல்லை. முதல் பத்தி எனக்காக எழுதியதாக இருக்கிறது. என் அப்பா மாட்டுப்பொங்கல், நாங்க (நானும் என் மனைவியும்) அவருடன் இல்லாத பொங்கல் நாளில் எங்களின் நினைவுகளில் இருந்ததாக ஹரி சொன்னான். அன்று காலை இடது கை ஒலையுதுடா ஹரி! நவ நீதன் டாக்டர்ட்ட போய்ட்டு வந்துடலாமா என்றவுடன், ஹரி சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்புகிறான். என் அப்பா எப்பவுமே 5 மணிக்கே எழுந்து அம்மாவுக்கு உதவியா இருக்கட்டுமேன்னு பாத்திரமெல்லாம் விளக்கி வச்சுடுவார், துணிமணியெல்லாம் துவைச்சு தருவார், ஒரு தாயுமானவனாய் இருந்தார், இருந்த வரை. ஊரில் இருந்து வந்தவுடன் என் துணிகளையும், என் மனைவியின் நைட்டி முதற்கொண்டு எந்தவித பாகுபாடும் இல்லாமல் துவைத்துத் தருவார். 6 மணிக்கு எல்லா வேலையையும் முடித்துவிட்டு, குளிர குளிர பச்சைத் தண்ணில குளிச்சுட்டு (என்ன சிதோஷ்ன நிலையாய் இருந்தாலும் அவர் வென்னீரில் குளித்ததே இல்லை) திவ்யமா, ஆண்டாள் பாசுரங்கள் எல்லாம் சொல்லி, உடல் முழுக்க சந்தனமோ, திருநீரோ இட்டு, ஈசி சேரில் சாய்ந்த படி பேப்பர் படிப்பார். மிக இலகுவான விஷயங்களில் மட்டுமே அவருக்கு ஈர்ப்பு. அரசியல் தெரியாது, சினிமா தெரியாது, ஆனாலும் பேப்பர் படிப்பார், எதற்கென்று தெரியாது இன்றுவரை.



ஹரி கிளம்புவதற்கு முன்னாலேயே அப்பாவுக்கு லேசா மார் வலிக்குதுன்னு சொல்லி சரிந்தார். இரண்டாவது மாடியில் இருந்து அவரை முதல் மாடிக்கு வந்து சேர்வதற்குள், மிகப்பெரிய விக்கலுடன் ஹரியின் கையில் இறந்து போனார். ஏழு நிமிடங்களே அந்த வலியில் முகம் சுருக்கியிருப்பார், போதும்டா என்பது போல ஹரியை பார்த்து ஒரு முறுவலுடன் இறந்து போனதாய் சொன்னான். பெங்களூரில் நான் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருக்கும்போது என் மனைவிக்கு வந்த தகவலில் அப்பா இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார் என்றும் உடனே கிளம்பி வரவேண்டும் என்று ஹரியின் நண்பன் லட்சுமணன் கூறியிருக்கிறான். என் மனைவியின் மேல் பிரியத்தை, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வருணனாய் பொழிந்தவர். இவர்கள் இருவரும் கைபிடித்து பேசிக் கொண்டிருக்கும்போது அம்மாவுக்கு கொஞ்சம் பொறாமையாய்க் கூட இருக்கும். பேண்ட் போட்டு பழக்கம் இல்லாத அப்பாவை, என் மனைவி பேண்டு போட வைத்து பெங்களூர் முழுக்க சுற்றிக் காட்டினாள். நான் கல்யாணம் ஆன நாள்ல இருந்து சொல்லுறேன், பேண்ட் போட்டுக்கோங்க, தலைமுடிக்கு டை அடிச்சுக்கோங்க, அப்பவெல்லாம் கேக்கல, மருமக வந்து சொன்னவுடனே, இவருக்கு வயசு திரும்பது என்று அடிக்கடி சடைத்துக் கொள்வாள் அம்மா. அப்பா என் மனைவியைப் பார்த்து, என் அம்மா இருக்கும் பக்கமாய் காட்டி, சரியான கோட்டி அவ! என்று லேசா தன் தலையில் அடித்துக் கொள்வார் என் மனைவியின் சிரிப்புக்கிடையே.



நானும் என் மனைவியும் காதலர்களாய் இருந்த போது, கல்லூரியில் இருந்து கொடைக்கானல் போயிருந்தோம், அப்போது நான் சென்னையில் வேலைப்பார்த்துக் கொண்டே படித்துக் கொண்டிருந்தேன் ஒரு மாலைக் கல்லூரியில். மதுரை வந்து தான் கொடைக்கானல் போனோம். என் வீட்டிலும் இதைப் பற்றி சொல்லியிருந்தேன், இவளைப்பற்றியும் சொல்லியிருந்தேன். என் மனைவி கிறித்துவ பெண் என்பதால் என் அம்மாவுக்கு அவ்வளவு இஷ்டம் இல்லை. அப்பாவிற்கு இவளைப்பார்க்க ஆசையா இருந்திருக்கு, ஹரியை உடன் அழைத்துக் கொண்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு என் அம்மாவிடம் சொல்லாமல் எங்களை, இவளை பார்க்க வந்திருந்தார். மதுரை ரயில்வே ஸ்டேஷன் முன்பாக ஒரு வினாயகர் கோவில் இருக்கும் அதற்கு அருகில் எங்களை இருக்கச் சொல்லியிருந்தார். கொஞ்சம் ஆட்டோக்களுக்கு மத்தியில் வெளிச்சம் குறைவாக இருந்ததால், நாங்கள் இருவரும் சிறிது தள்ளி ஒரு விளக்கு கம்பத்தின் கீழ் நின்றோம். ஹரி எங்கள் இருவரையும் பார்த்து அப்பாவை அழைத்துக் கொண்டு அருகில் வந்தான். வந்தவுடன் இவளை உற்றுப் பார்த்தார், கீழிருந்து மேலாக ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தார், என்னம்மா நல்லாயிருக்கியா? கொஞ்சம் நேரமிருந்தா வீட்டுக்கும் வந்திருக்கலாம்னு, தன்னுடைய ஏமாற்றத்தைச் சொன்னார். தீபாவளிக்கு சாண்ட்ராவ கூட்டிட்டு வாடான்னு என்னை நோக்கிச் சொன்னார். நானும் சரியென்று மையமாக தலையசைத்து வைத்தேன். ஏனோ சிறிது கண்கலங்கினார், இவள் அவர் கையைப் போய் பிடித்துக் கொண்டாள். என்னைத் தனியே அழைத்து கொஞ்சம் குட்டையா இருக்காள்ல என்று என் ஆமோதிப்பை எதிர்பார்த்தார், பிறகு அவரே நல்ல பிள்ளையாத் தெரியுது, நானும் அம்மாகிட்ட பேசுறேன், தோத்திரம்மா, உங்க வீட்ல எல்லாரையும் நான் விசாரிச்சதா சொல்லும்மா. பத்திரமா போய்ட்டு வாங்க, சாப்டீங்களா, ஏதாவது சாப்பிடலாமா, நேரமிருக்கா என்று கேட்டார், நாங்க சாப்பிட்டதைச் சொன்னதும். பாலு ஆட்டோல தான் வந்தோம் என்று தொலைவாய் கை காட்டி அதோ அங்க நிக்கிறான். என்று விடைபெற்றார். என் மனைவியும் கண்கலங்கி இருந்தாள். எனக்கு நிறைவாய் இருந்தது அந்த சந்திப்பு. அப்பா எல்லா சாதாரண பொழுதுகளையும் உன்னதமாக்கி விடுவார்.



அன்புடன்
ராகவன்

Friday, October 23, 2009

ஒரு க(வி)தை!

ரகசியத் தோழி
குடுத்த துண்டுச்சீட்டைக் காட்டி
என்னையும்
உடன் அழைக்கிறாய்!

எதற்கும்
இருக்கட்டுமென்று
ஒன்றுக்கு கூடுதலாகவே
ஆணுறைகளை வாங்கி கொண்டாய்

தொலை தூரப் பயணத்
தேவைகளை
நீயே பார்த்து கொண்டாய்
உன் கனவுகளின்
ஆடைகளை களைந்து
எனக்கு முயங்க கொடுத்தாய்

தோழி வீட்டை
அடைந்து
தடதடக்கும்
கதவின் தாழ் நீக்கி
அவளைத் தொடுகிறாய்!

இரண்டாய் பிளக்கிறாள்
இரு வேறு நிறங்களில்
நீலம் எனக்கென்றாய்
வெளிர் மஞ்சள்
நீ எடுத்துக்கொண்டாய்!

நைச்சிய நிறங்கள்
பூசி சுடலைமாடன் ஆனேன்!

Wednesday, October 21, 2009

குறும்பா..

பிரிவுகளைச் சொல்ல
ஒரு மயிற்பீலி போதும்

உறவுகளைச் சொல்ல
குத்தீட்டிகள்
தேவைப்படுகிறது

என்னில் வழியும்
குருதியில் ஜனிக்கிறது
ஒரு ஒற்றைக்  கவிதை

பாடுபொருளாய் நீ!

Friday, October 16, 2009

அம்மா என்னும் வேம்பு

பாட்டி வீட்டில்
இருந்து படிக்க
மல்லாங்கிணறுக்கு
அனுப்பப்பட்டேன்

மதுரையில் இருந்து
பிரிந்த தோழிகளையும்,
தோழர்களையும்
கண்ணீருக்குள் நிறுத்தி

எல்லாத்துக்கும்
காரணம் என்று
பெரியப்பாவை
கெட்ட வார்த்தைகளில்
திட்டினேன்

அக்காவின்
கூழாங்கற்களையும்
சோழிகளையும்
வாய்க்காலில் எறிந்தேன்
அவள்
ஜியாமெட்ரி நோட்டில்
கண்டபடி
கிறுக்கி வைத்தேன்

போலீஸ்கார அப்பாவின்
சாக்ஸ்களை கிழித்து
பிராஸோவில்
மண்ணைக்கொட்டினேன்
ஷூ பாலீஸை
தண்ணித் தொட்டிக்குள் போட்டேன்

அம்மாவிடம்
போய் அழுதேன்
அம்மா
ஒரு வேப்பங்கன்றைக்
கொடுத்தாள்
பாட்டி வீட்டில் எங்கு
நட்டு வளர்க்க வேண்டும்
என்று சொன்னாள்

வேப்பமரம்
கிளை பரப்பி வளர்ந்தது
என்னுள்
கசப்புகளை மீறி…

Thursday, October 15, 2009

மீட்சி...

உறுப்புகள்
சுருங்கத் தொடங்குகிறது

உரோமங்கள்
உள்புகுகின்றன

தோல் வெளுத்து
மிருதுவாகிறது

எலும்புகள்
குறுகி இளக்கமாகிறது

உடலில் இருந்து
பிசுபிசுப்பாய் திரவம் சுரக்கிறது

தொப்பூளில் இருந்து
கொடி வளர்கிறது

உடலைச்சுற்றி
சவ்வு பரவி மூடுகிறது

இருள் சுவர்களில்
நீர் நிறைந்து
மிதக்கிறது நான்

உந்தித் தள்ளி
வெளி வர உரம் வளர்க்கிறேன்.

Sunday, October 11, 2009

நுன்மாண் நுழைபுலம்... (இரண்டாம் பதிவு(ப்பு))

கார்லின்ஸ் அப்பல்லோ, பெயர் போலவே ஒரு வித்யாசமான நண்பன். அவனுடைய பெயர் பற்றிய நிறைய கேள்விகள் இருந்தாலும், பெயர்க்காரணம் பற்றி கூட ஒரு விரிவான கலந்துரையாடல் எங்களிடையே இருந்ததில்லை. அவனுடைய பெயர் எனக்கு நீல் ஆர்ம்ஸ்டராங், நெப்போலியன் போனபார்ட், மார்ட்டின் லூதர் கிங் போன்ற சரித்திர புருஷர்களையும், சாதனையாளர்களையும் ஞாபகப்படுத்தும். அவனிடம் இதைப்பற்றி சொல்லும்போது மிகச் சிறிதாய் சிரிப்பான். சீராய் கீழிறங்கும் மூக்கு, சற்றே துருத்திய பல் வரிசை, வெளியே வந்து எப்போதும் விழலாம் என்பது போன்ற பெரிய பளபளக்கும் கண்கள், ஒடிசலான உடம்பு, இரண்டு கைகளையும் மாற்றி மாற்றி பின்னுக்குத் தள்ளி நெஞ்சை முன் தள்ளி ஒரே தாள கதியில் ஹவாய் செருப்பில் நடக்கும் ஒரு எங்கும் சந்திக்கக் கூடிய மிகச் சாதாரணமான தோற்றத்தில் அசாதாரணமான நண்பன். மிக ஏழ்மையான வீடு அவனுடையது, விவசாயக் குடும்பத்தில் பிறந்த நல்ல தேர்ந்த படிப்பாளி. எங்கள் பள்ளியில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில், தூரம் வந்த பெண்ணைப்போல் ஒதுங்கிய ஒரு சிறிய கிராமத்தில், அவன் வீட்டைப் போல ஒரு இருபது முப்பது வீடுகள் மட்டுமே இருக்கும் ஊர் தான் ஆலம்பட்டி.


தெருவில் இருந்து பார்த்தாலே வீடு மொத்தமும் தெரிவது போல் ஒரு வீடு. ஒரு பெரிய வேப்பமரத்தின் நிழலில், ஒரு வேப்பங்கன்றாய் குளிர்ந்து நின்றிருக்கும் அவன் வீடு. எதிரில் ஒரு புளிய மரம், சம்பந்தகாரர்களின் செய்முறையாய் தன் பங்கிற்கு நீண்டு தண்ணீர் பந்தலாய் நிழல் விரித்திருந்தது. அவனுடைய பெயர் அவனின் வீடு பற்றி வேறு விதமான ஒரு நினைப்பைக் கொடுத்திருந்தது, அந்த நினைப்பை அப்படியே புரட்டிபோட்டது போல இருந்தது அவன் வீடும், அவனுடைய அப்பாவும் அம்மாவும். கார்லின்ஸ் என்று அவனை அழைக்க அந்த இடத்திற்கே அந்த பெயர் அந்நியமாகப்பட்டது போல் இருந்தது. அவனுடைய அப்பா, கார்லின்ஸ் இரண்டு பேரும் அந்த சிறு வீட்டினுள் இருந்து வந்தார்கள். கார்லின்ஸ் எங்களைக் கண்டதும் பெரிதாக சிரித்தான், அவன் சிரிக்கும் போது அவனுடைய உதட்டை வைத்து பற்களை மூட முயல்வது அழகாக இருக்கும். அவன் அப்பா அவனின் சில பென்சில் திருத்தங்களுடன் இருந்தார். அவனின் உடன் பிறந்தவர்கள் பற்றிய விவரங்கள் ஏதும் தெரியாது எனக்கு. அவசியமாகப்பட்டதும் இல்லை. அவன் வீடு இருந்த அந்தத் தெருவில் (வ.உ.சி தெரு என்று ஞாபகம்) இடது பக்கத்தில் முதல் வீடு அவனுடையது… வழியெங்கும் விரவி இருக்கும் நெருஞ்சி முட்செடிகளும், தொட்டாச்சினுங்கிகளும், பெயர் தெரியாத வெள்ளை, மஞ்சள் பூக்கள் தரையில் படர்ந்து எந்தவித அலட்டலும் இல்லாமல், யாருக்காகப்பூக்கிறோம் என்ற எந்தவித கேள்விகளும் இல்லாமல் இயல்பாய் அவனை அடையாளம் காட்டுவது போல் இருந்தது. அவனை சந்திக்க அவன் வீட்டிற்கு சென்றது, அது தான் முதல் முறை. அவன் வீட்டிற்குள் போகாமல் வெளியே நின்று ஒரு சொம்பு நிறைய தண்ணீர் வாங்கி குடித்து விட்டு, அவன் அம்மா உள்ளே அழைத்தபோதும், வெளியிலேயே நின்று எதிரில் புளியமரம் விரித்திருந்த குளிர் நிழலில் கதைகள் பேசி சுவாரசியக் குறைபாடுகள் ஏதுமின்றி சினிமா, கவிதை என்று தின்று செரிக்க முடியாமல் திரும்பினோம். ஒரு தேர்ந்த, முதிர்ந்த நட்பு எங்களுக்குள் ஒரு மெல்லிய சூல் மேகமாய் நின்று பொழிந்துவிட்டுச் சென்றது. பேசியவற்றில் விஷயங்கள் குறைவாக இருந்தாலும், உணர்வுகள் பகிர்ந்து கொண்டது, கைபிடித்துக் கொண்டது அவனுடைய வெம்மையைக் காட்டியது. நான் யாரிடமாவது அல்லது யார் மீதாவது ஒரு அதிகாலை சூரியன் போல் இதமாய் இருந்திருக்கிறேனா என்று யோசித்தால் இல்லை என்றே சொல்லத் தோன்றும்.

ஆறாம் வகுப்பில் இருந்து அவனும் நானும் ஒன்றாக படித்திருந்தாலும் எங்களிடையே ஒரு நெருக்கம் வந்தது.. பத்தாவது படிக்கும் போதுதான். நான் மதுரை டவுனில் இருந்து ஒரு ஒன்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் நாகமலையில் அமைந்துள்ள ஜெயராஜ் நாடர் மேல் நிலை பள்ளியில் படித்துக் கழித்தேன் என்னுடைய பள்ளி வாழ்க்கை முழுதும்... எப்போதும் ஒரு சப்ஜெக்ட் இரண்டு சப்ஜெக்ட் பெயில் ஆகும் எனக்கு, நல்ல ரேங்க் வாங்கும் கார்லின்ஸ் மிக தூரமாய் போனதில் ஆச்சரியம் இல்லை.. எங்களுக்கு ஒரு மிக பெரிய பாலமாய் இருந்தது... எஸ் கே பிரபு தான் என்று நினைக்கிறேன்... ஏதேச்சையாக ஒரு வைரமுத்துவின் பாடலில் ஏற்பட்ட சந்தேகம்.. கார்லின்ஸ்ஐ என் பக்கம் திருப்பியது...இளமை வயலில் அமுத மழை விழ...யார் எழுதியது என்ற கேள்வி எனக்கு திசை திருப்பப்பட்டது... நான் அந்தப்பாடலின் முழு ஜாதகத்தையும் சொல்ல, கார்லின்ஸ் என்னுடன் நெருக்கமானான் அல்லது நான் அவனை நெருக்கமாய் உணர ஆரம்பித்தேன்.. எனக்கு தெரிஞ்ச சப்ஜெக்ட் பேச, என்னை பிரதானப்படுத்த கிடைத்த அந்த வாய்ப்பை நான் நழுவ விடவில்லை.... கொஞ்சம் கொஞ்சமாக...வைரமுத்து, பாலகுமாரன், மு.மேத்தா, அப்துல் ரஹ்மான், வாலி, கண்ணதாசன் என்று சினிமா பாடல்களில் கவிதை என்ற கடை விரித்து புது உலகம் அறிமுகம் செய்தேன் அவனுக்கு... என்னுடைய அம்மாவிடம் இருந்து வந்த சினிமா அறிவும், சிலோன் ரேடியோவும் எனக்கு புது அங்கீகாரங்களை தேடி கொடுக்கும் என்று எனக்கு அப்போது தான் தெரிந்தது. மிக நெருக்கமாய் உணர ஆரம்பித்த ஒரு வருட காலத்தில் அவனுடைய அந்த எளிமையான, இயல்பான ஒரு சிநேகம்.. எனக்கு மழை நேரம் கிடைத்த தாழ்வாரமாய் அமைந்தது.

கார்லின்ஸ் ஒரு மஹாகலைஞன், அவன் கைப்படும் பொருட்கள் எல்லாம் கலையாய் மாறும், அவன் புத்தகங்களில், நோட்டில், ப்ராக்டிகல் வரைபடங்களில் அவனுடைய முத்திரை, அவனுடைய பெயர் எழுதி இருக்கும் விதமே அவனை ஒரு மிகச் சிறந்த படைப்பாளியாய் காட்டும்... மிக சிறந்த பிரபலம் இல்லாத ஓவியன்...என் பள்ளியில் நடக்கும் ஓவியப்போட்டிகளில், கையெழுத்துப்போட்டிகளில் பரிசு பெற முழுத்தகுதி கொண்டிருந்தும் அதைப்பற்றி அவன் எப்போதும் கண்டுகொண்டதில்லை. நல்ல ஒரு கவிஞன்...அவனின் சந்தகவிதைகள் எல்லா அடிப்படை இலக்கன விதிகளுக்கும் உட்பட்டு ஒரு சீசாவுக்குள் உறங்கும் மாயப்பிசாசாய் உருமாறும் ரகசியம் இன்று வரை எனக்கு வாய்க்கவே இல்லை. நான் அவனை ஏன் பெரிதாக உற்சாகப்படுத்தவில்லை என்பது எனக்கு இன்று வரை புரியாத ஒரு விஷயமாக இருக்கிறது. எங்கள் இருவருக்கும் பாரதியின் மேலான ஈர்ப்பு ஒரே வகையானது. அவருடைய பக்தி, காதல், அன்பு என்று மாறி மாறி பயணிக்கும் பாடல்கள் எங்களுக்கு மிகப்பிடித்தமானவை. அவருக்குள்ளே இருக்கும் ஒரு முரன் எங்களை பாரதியின் பால் மேலும் கொண்டு சென்றது. இருவருமே பாரதியின் பாதிப்பில் கவிதை எழுத ஆரம்பித்தோம். எத்தனையோ முயன்றும் அவனின் கற்பனைத்திறன் எனக்கு வாய்த்தே இல்லை. அதுவும் அவனுடைய கையெழுத்து அதை இன்னும் அழகாக்கும். கண்ணம்மா என் காதலி போல அவன் எழுதிய கண்மணி என் காதலி என்ற காதல் வழியும் பாடல்கள் படிக்கிற எல்லோரையும் காதலுறச்செய்யும். அவனுக்கு அந்த வயதில், பதினாறு வயதில் காதல் இருந்திருக்க வேண்டும், அதை அவனிடம் கேட்டு அவனை கேலி செய்யக்கூட தோன்றாது யாருக்கும். ஒரு புனல் நீராய் சுனை நீராய் சுத்தமாய், தித்திப்பாய் இருந்திருக்கிறான். யாரையும் நோகாமல் தன் கருத்துக்களை வைக்கும் ஒரு உன்னத ரசிகன், விமர்சகன், நிறைய பேர் ராஜமார்த்தாண்டன் இறந்தபோது அவருடைய விமர்சிக்கும் பண்பை மிக சிலாக்கியமாய் சொல்லியிருந்தார்கள், அதைப்படிக்கும் போது எனக்கு கார்லின்ஸ் என்ற நண்பனின் உன்னத குணங்களில் ஒரு வியப்பு தான் மிஞ்சியது. மிக சிறந்த மனிதன்... ரொம்பவும் நல்லவன்... ஒரு கிறித்துவன் நல்லவனாய் இருப்பது விசேஷம் இல்லை... ஏசுவாக இருப்பது மிக அரிது... அவன் ஏசுவாய் தெரிந்தான் எனக்கு… அல்லது அவன் ஏசுவின் தண்மையைக் கொண்டிருந்தான். எத்தனையோ விதமான மனக்குறளிகளை தன்னுடைய நல்லதனத்தினால் சொஸ்தபடுத்தி இருக்கிறான். என்னை விட எல்லா விதத்திலும் சிறந்த அவனை பார்த்து எனக்கு கிஞ்சித்தும் பொறாமை ஏற்பட்டதில்லை... அவனுடைய நல்லதனம் என் பொறாமை, பொச்சரிப்பு எல்லாவற்றையும் பொசுக்கி விட்டது போல.....

வகுப்பின் இடைவேளை சமயங்களில் எங்களுக்குள் ஒரு விளையாட்டு நடக்கும், பார்வையாளர்களாக அண்ணாதுரை, குரு இருப்பது வழக்கம், வகுப்பில் இருக்கும் கரும்பலகையில் நான் அல்லது அவன் எதாவது ஒரு சினிமா பாடலின் நடுவில் இருந்து ஒரு வரியை எழுதுவோம் அதை மற்றவர் கண்டு பிடிக்க வேண்டும்... என் கையெழுத்து திருந்தியதற்கு இந்த ஒரு விளையாட்டு ஒரு காரணம். ஒருமுறை எழுதியதில் அழிக்காமல் விட்டுச்சென்ற ஒரு வைரமுத்துவின் ஒரு பாடல் வரி….சேலைப்பூக்களில் தேனைத் திருடுது பொன்வண்டு… எங்களுக்கு ஆங்கிலம் எடுக்கும் ரெங்கசாமி என்ற வாத்தியார் பார்த்து எங்களை கடிந்தது அவனுக்கு ஞாபகம் இருக்குமா என்று தெரியவில்லை. நான் நிறைய படிக்க, எழுத உதவிய ஒரு கிரியாஉக்கியாக இருந்திருக்கிறான். என்னுடைய இன்றைக்கும் இருக்கும் எழுத்து ஆர்வம், வாசிப்பு மேம்பட்டதிற்கு ஒரு மிகப்பெரிய காரணகர்த்தா அவன்…. அநேதமாக எல்லா பிரபல பாடல்களும் எனக்கு பரிச்சயமாய் இருந்தாலும் அவனின் தேர்வுகள் நிறைய வித்யாசமாய் இருக்கும்... ஆட்டோ ராஜா என்ற படத்தில் இருந்து வரும் ஒரு பாடல்... மலரே என்னென்ன கோலம்... கடலில் அலைகள் பொங்கும்... ஒரு ராகம் பாடலோடு.... சித்திரை செவ்வானம்... ராஜாமகள், மஞ்சள் நிலாவுக்கு, ஜெய்சந்தரனின் தீவிர ரசிகனனான கார்லின்ஸ் என்னை அவன் பால் ஈர்த்ததற்கு ஒரு மிக முக்கிய காரணம் அவனுடைய மேலான ரசனை என்று உறுதியாகச் சொல்லலாம்.

ஒரு முறை திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் வழியில் (பரவை என்று ஞாபகம்) ஒரு இடிபட்ட அல்லது இடிக்கப்பட்ட ஒரு பள்ளிக்கூடத்தில் கரும்பலகை இருக்கும் சுவர் மாத்திரம் தனித்து நின்று கொண்டிருந்தது. அதிலிருந்து அழிக்காமல் விட்ட கையெழுத்தில் பாரதியின் கவிதை எனக்கு மீண்டும் கார்லின்ஸை ஞாபகப்படுத்தியது. இது போன்ற பள்ளியில் என்னைப்போல் கார்லின்ஸ் போல் சினிமா பாடல்களை கவிதை அந்தஸ்திற்கு உயர்த்திய குழந்தைகள் இருந்திருக்கலாம். அந்த குழந்தைகள் இப்போது வேறு ஏற்பாடாக வேறு ஒரு பள்ளிக்கோ அல்லது இந்த பள்ளியே வேறு ஒரு இடத்திற்கு பெயர்ந்திருக்கலாம். அங்கும் கார்லின்ஸ் போன்ற நண்பர்கள், என் போன்றவர்களுக்கு அமைந்திருக்கலாம், அவர்களும் கதை பேசி, கதை சொல்லி, உணர்வு பகிர்ந்து, உணர்வெழுதி வாழ்ந்திருக்கலாம், வளர்ந்திருக்கலாம்.

அவன் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மிக அதிக மதிப்பெண்கள் வாங்கி எஞ்சினியரிங் படிக்கச் சென்றதாக வந்த கடைசித் தகவல் போதுமானதாக இல்லை அவனை அடையாளம் காண… நல்ல கவிமனமும் கொண்ட அவன் இப்போது எப்படி இருப்பான், அவனுள் இருக்கும் அந்த மண்பாண்டக் கலைஞன் இன்னும் உயிரோடு இருப்பானா? அவனின் மரபடையாளங்கள் இன்னும் யாரிடமாவது மிச்சம் இருக்குமா…?. வாழ்க்கை தனது ஓட்டத்தில் இவனை இடறிச்சென்றிருக்குமா அல்லது புதிய சப்பாத்துகளை கொடுத்திருக்குமா? தொடர்பற்ற வெளியில் சமூக வலைகள் பின்னிக்கிடக்கிறது எங்கும், உறவு தேடி அலைகிறோம் காற்றில். ஒரு கட்டியக்காரணாய் அலைகிறேன் அவனைப்பற்றிய நினைவுகளுடன், சிலிக்கன் பெருவெளியில் தொலந்து போனவர்களின் பட்டியலில் அவன் பெயர் இல்லாதிருக்கட்டும்… இந்தமுறை மதுரை செல்லும்போது அவனைப்போய் பார்க்க வேண்டும் என்று பிரபுவிடம் சொல்லி வைத்திருந்தேன். எனக்காக அவனும் கடையை கடைப்பையனை பார்க்க சொல்லிவிட்டு என்னுடன் கிளம்பினான்.

ஒரு ஞாயிறு முன்பகலில் கார்லின்ஸை சந்திக்கும், அவன் இருந்த ஊரைப் பார்க்கும் அந்த விசேஷ தருனத்திற்காக ஆலம்பட்டி நோக்கி விரைந்தோம்….. நம்பிக்கையுடன்.

(என் பதிவுலகை இப்போது வாசிப்பவர்கள் நான் இதை ஆரம்பித்த போது எழுதியதை படித்திருக்க மாட்டார்கள் என்பதால், இதை மறுமுறை பதிகிறேன்.. ஏற்கனவே படித்தவர்கள் மன்னிக்கவும்)

Saturday, October 10, 2009

மரமாகு பெயர்

ஒரு தவிட்டுக்குருவி
சுள்ளிகளை குச்சிகளை
வாயில் கவ்வியபடி
கூடு கட்ட இடம்
தேடி கொண்டிருந்தது

தார்சாலின்
இடுக்கில் ஒரு இடம்
காண்பிக்கிறேன்
பரணுக்கு மேலே
ஒரு இடத்தையும்

அந்த இடங்கள்
அதற்கு
பிடித்தமானதாய் இல்லை
போலும்

எங்கு வேண்டுமோ
கட்டிக்கொள் என்றேன்

என் தோளில் அமர்ந்து
தலையில் குச்சிகளை சொருகி
கூடு கட்ட எத்தனித்தது
நான் மரமாகி போனேன்m

Wednesday, October 7, 2009

இரண்டு கவிதைகள்

கவிதை (1)

( நவீன விருட்சம் வலை இதழில் பிரசுரமாகியுள்ளது, கவிதை (1), நவீன விருட்சத்திற்கு நன்றிகள் பல...)
அலுவலகம்
செல்லும் வழியில்
அடிபட்டு
இறந்திருந்தது ஒரு செவலை நாய்

விரையும் வாகனங்களின்
குழப்பத்தில் சிக்கி
இறக்க நேரிட்டிருக்கலாம்

நாலைந்து நாட்களில்
தேய்ந்து கரைந்தது
இறந்த நாயின் உடல்

காக்கைகள் கொத்தி தின்ன
ஏதுவில்லை
வாகனங்கள்
நெடுகித் தொலையும்
பெருவழிச்சாலையில்

எப்போதும்
பிறரின் மரணங்கள்
ஒட்டியிருக்கிறது
நமது பயணத்தடங்களில்.

கவிதை (2)

உனக்கு பிடிப்பது
எனக்கு பிடிப்பதில்லை
எனக்கு பிடிப்பது
உனக்கும் அப்படியே
நமக்கு பிடித்திருந்தால்
மற்றவர்களுக்கு
பிடிப்பதில்லை எப்போதும்
எல்லோருக்கும்
பிடித்தது என்று
எதுவும் இல்லை

ஆனாலும்
நகர்கிறது
பிடிப்புடன் வாழ்க்கை

Tuesday, October 6, 2009

காமராஜுக்கு சில கடிதங்கள் (பின்னூட்டங்கள்)

மண்மாதிரிகள் என்ற பதிவிற்கு என்னுடைய பின்னூட்டம்


அன்பு காமராஜ்,

மனிதர்களுக்கு ஐம்பூதங்களையும் அடக்கி ஆள ஆசை. வான், நீர், நெருப்பு, காற்று, மண் என்று தனது ராஜ்ஜியங்களை விரிவு படுத்த பிரயாசைப்படும் ஒரு விபரீத கோட்பாடு எல்லாரிடத்திலும், நான் உட்பட இருக்கிறது. ஆள ஆசைப்படும் எதைப்பற்றியும் அறிவு இல்லை நமக்கு.

எத்தனை அறைகூவல்கள் கிரீன் எர்த், மதர் எர்த்,க்ளோபல் வார்மிங், ஓசோன், மாசில்லா காற்று, மாசற்ற நீர், வருங்காலத்திற்கு மிச்சம் இருக்கட்டும் நீ அனுபவித்தது, அனுபவிப்பது என்று சமண்பாடில்லாத இரைச்சல்கள்.

மலைகளின் முலைகளில் வடிகிறது விஷப்பேரருவி, வருங்காலம் நுழைய மறுக்கும் பூமியின் யோனி பெருங்கதவுகள், மரங்களின் நுரையீரல்கள் திரட்டும் கரியமிலப் பைகள், விந்தின்றி தொங்குகிறது மேகத்தின் விரைப்பைகள், வன்புணர்ச்சியில் லயிக்கிறது ஒரு எழும்பாத, நித்ய மரண இசை எல்லோர் எழவிலும். உன், என் உடல் கருகுகிறது நெருப்பில்லாமல், புகைதானே என்ற அலட்சியம் எல்லோரிடத்திலும்.

மண் மாத்திரம் இல்லை காமராஜ், எல்லா பூதங்களையும் சீசாவில் அடைக்கும் செப்படி வித்தைக்காரர்களாய் உலவ ஆசைப்படுகிறோம்.
உனக்கு ரேடியோ ஒக்குடத் தெரியுமா? தெரியும், ரேடியோ புதுசா செய்யத்தெரியுமா? தெரியாது, இதன் நீட்சிதான் நாம் எல்லாவற்றையும் பிரித்துப் போட்டுவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் கை பிசைந்து நிற்பது எல்லாம்.

அறியாமையின் குழந்தைகள் தான் நாம் இன்னும், மாற்றங்கள் பற்றி பேசுவோரின் மார்தட்டல்கள் தொப்பு, தொப்பென்று வெறும் காற்றுக் குடுவையில் அறைகிறது, போர் பிரகடனங்கள் என வேஷம் கட்டிக்கொண்டு.

 அழகு வேலைப்பாடுள்ள கல்லறைகளுக்குள்ளே தானே நீங்களும், நானும். கல்லறைக்குள் இருந்து கொண்டே கல்லறையை பார்க்கிறோம் நாம். நரகலில் வாழும் நமக்கு பீ வாசம் தனியாக தெரிகிறதா என்ன? அகண்ட காவிரி அகத்திய கமண்டலத்தில் நிறுத்தியதைப்போல ஒரு மூட்டை மண்ணில் நமது தேசம், தூக்கிக் கொண்டு அலைகிறார் பிரகதீசுவரன், தோள் கொடுக்க ஆட்கள் உண்டு நம்மிடையே.

என்னை எங்கெங்கோ கொண்டு சென்று விட்டது உங்களின் இந்த பதிவு. கொஞ்சம் அதிகமாக எழுதிவிட்டதற்கு வருந்துகிறேன், உள்ள இருக்கிறது வெளியே.

அன்புடன்

ராகவன்.

ரசனை வித்தியாசமானது, அறிவு விசாலமானது என்ற பதிவின் பின்னூட்டம்

அன்பு காமராஜ்,

அகமிளிரும் அழகு மிகுந்த ரசனைக்குண்டானது. எனக்கு சுசீலா என்றொரு தோழி இருந்தாள். சிவந்த நீள் முகத்தில் பருக்கள் அடர்ந்து, முன் துருத்திய பற்களும், சமணில்லா உடம்புடனும், யாருக்கும் ஈர்ப்பில்லாமலே அழகாய் இருந்தாள், கொஞ்சம் மெனக்கெட்டால், அவளை சில பென்சில் திருத்தங்களுடன் புறத்தோற்றத்தில் மாற்றங்களுடன் ஓரளவு அழகாய் காட்ட முடியும், ஆனால் அவள் அதுபோன்ற எந்தவித பிரயத்தனங்களும் நான் பழகிய நாட்கள் வரை செய்ததில்லை.

என் தங்கை (உடன் பிறவா) ஐஏஎஸ் கோச்சிங் படிப்பதற்காக, மதுரை காமராஜ் யூனிவர்சிட்டி வளாகத்தில் தங்கி பயிற்சி வகுப்புகளில் ஈடுபட்டு இருந்த போது, அவளின் அறைத்தோழியாக சுசீலா எனக்கு அறிமுகமானாள், என் தங்கை அவளை அறிமுகம் செய்யும்போதே, உன் போன்ற ரசனைகள் உள்ள பெண் என்ற போது எனக்கு அவளுடன் பேசுவதற்கான ஈடுபாடு எந்தவித முஸ்தீபுகளும் இல்லாமல் ஏற்பட்டது. பேச, பேச கடல் போல விரிந்த அவளுடைய நாலேட்ஜ் பேஸ் என்னை வியக்க வைத்தது. ராம கிருஷ்னர், விவேகானந்தர், பிங்பாங்க் தியரி, குவாண்டம் தியரி, ராமானுஜர், ஜேகே என்ற என்னுடைய எல்லா வாசல்களையும் திறந்துவிட்டாள் அவள்.

எனக்கு அதிகபட்சமாக 68 பக்கங்களில் கடிதம் எழுதியிருக்கிறாள், வரிக்கு வரி சீனு, சீனு என்று. ஒரு முறை என்னை பார்க்க வீட்டிற்கு வந்தாள், வழக்கத்திற்கு விரோதமாய் ஒரு சரசரக்கும் பனாரஸ், ஆரஞ்சு கலர் புடவையில் தகதகவென்று ஒரு பெரிய சுடர் போல, சுடருக்கு முகமுண்டா,இல்லை அவளின் புறத்தோற்றத்தை பொசுக்கிய ஒரு பெரிய ஜுவாலாமுகியாய் அகப்பிரகாசத்துடன், சீனு என்று உள் நுழைந்தாள். என் அம்மாவுக்கு அவளின் புறத்தோற்றம் ஒரு முகசுழிப்பைத் தந்தது, என்னடா இப்படி இருக்கா, என்று கேட்டாள். அம்மாவை அடக்கி உள் அனுப்பினேன், அவள் என்னுடன் பேசாமலே, விஷயப் பகிர்வு இல்லாமல் இருந்திருந்தால் எனக்கும் அவளுடைய புறத்தோற்றம் கவலை கொள்ளச் செய்திருக்கும். என்னுடன் வெளியே போக வேண்டும் என்றாள், நான் அவளை அழைத்துக் கொண்டு கூடலழகர் பெருமாள் கோயிலுக்கு சென்றேன், இரண்டு பேரின் பெயருக்கும் அர்ச்சனை செய்தாள், மணிக்கணக்காய் பேசினாள், நான் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தேன், என்னை நோக்கி நீயும் பெருமாள் மாதிரி என்ன சொன்னாலும் இடைமறிக்காமல் கேட்டுக்கொண்டே இருப்பாய், அதனால் தான் எனக்கு கடவுள் என்கிற கேட்பாளரை ரொம்ப பிடிக்கும், he is a good listener, like you. என்ற அவளின் சின்ன சின்ன சித்தாந்தங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தும்.

உடன் நடக்க ஆசைப்பட்டு இங்கே இருந்து பழங்கா நத்தத்திற்கு நடக்கலாமா, உன் கைய பிடிச்சுக்கவா? என்று என்னை கேட்கும்போதே கையை பிடித்துக் கொண்டாள். அங்கே இருந்து திரும்பவும் பேசிக்கொண்டே நடந்தாள் என்னை வழி நடத்தி. சீனு கொஞ்சம் பூ வாங்கித் தரயா? எனக்கு கனகாம்பரம் ரொம்ப பிடிக்கும், தோற்றப்பொலிவோ, வாசனையோ இல்லாமல் எளிமையாய் பூ என்கின்ற அடையாளத்துடன் மட்டும் என்று ஞாபக அடுக்குகளில் மலர்களை செருகிக் கொண்டே நடந்தாள். அவள் காதலிக்கும் எதிர்வீட்டு மரக்கடைக்காரன் மகனைப்பற்றி முதல் முறையாக பேச ஆரம்பித்தாள், தன் ஒரு பக்கக் காதலை இன்னும் அவனிடம் சொல்லவில்லை என்றும், அவன் பார்க்க கருப்பா அழகா இருப்பவன் என்றும் கூறினாள், அவன் பார்க்காத போது இவள் அவனைப்பார்க்கும் தருனங்களை அவள் விவரித்தது எந்தவித வரையறைக்குள்ளும் அடங்காமல், காற்றில் பறக்கும் முன் நெற்றி மயிராய் வாளிப்பாய் இருந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளிடம் இருந்து கடிதம் வந்தது. அவளுடைய கணவன் மெடிக்கல் ரெப் வேலை செய்வதாகவும், அபினயா என்று ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும், அது அவரைப்போலவே அழகாய் இருக்கிறது என்றும் கூறினாள். அவளின் மிகப்பெரிய அழகு அவள் மற்றவரை நேசிக்கும் விதம், எந்தவித நிஷ்களங்கமும் இல்லாமல் தெளிந்த நீரோடையாய் நகர்கிறது அவளின் காதற் பெருவாழ்வு.

you kindled me...

அன்புடன்

ராகவன்


புதுவிசை வாசகர் சந்திப்பும் பதிவுகளும், ஒரு பின்னூட்டம்

அன்பு காமராஜ்,

உங்களின் கோபம் அழகாய் இருக்கிறது. இது போன்ற அனுபவங்கள் எனக்கு இல்லை. எழுத்தில் இவ்வளவு தீவிரமாக இயங்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

உங்கள் கோபத்திற்கான காரணங்கள்...
புதுவிசையின் இலக்கிய முகம் பற்றிய கேள்விகள்,
உங்களின் குறுக்கீட்டை கண்டு கொள்ளாமல் போனது
உங்கள் பதிவைப் பற்றிய சிலாகிப்பு இல்லாதது
பிரபலமானவர்களின் ஒளியில் மற்ற படைப்பாளிகள் மங்கிப் போவது
பேச்சு சுகம், கேட்பாளர்கள் இல்லாதது

மேற்கூறிய எல்லாமே உங்கள் கோபத்திற்கு காரணமா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா?

எனக்குப் புரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை, ஆனால் ஒன்று நிச்சயம், உங்கள் கோபம் அழகாய் இருக்கிறது.

அன்புடன்,

ராகவன்

கமல் ஒரு காமன் மேன் இல்லை பதிவின் பின்னூட்டம்.

அன்பு காமராஜ்,
உன்னைப் போல் ஒருவனை எல்லோரும் பேசுகிறார்கள் பதிவுலகில், அவரவர் வசதிக்கேற்ப தங்கள் மறுதலிப்புகளை, ஒவ்வாமையை தங்களால் இயன்றவரை பதிவிட நினைக்கிறார்கள். நீங்களும் உங்கள் பங்குக்கு, உங்கள் கருத்தை முன் வைக்கிறீர்கள். கமலின் தவிர்க்கமுடியாத ஒரு குணக்கேடுகளில் ஒன்று தன்னை முன்னிறுத்திக் கொள்ளமுயல்வது, என் அடையாளங்கள் தெரியாவிட்டால் என்னை படைப்பாளி என்று யார் சொல்வார்கள் என்கிற தன்முனைப்பு. ஒரு சிறந்த நடிகன், தன்னை பல்கலை வித்தகனாய், எல்லாவற்றிலும் தன் முத்திரைகளை இட்டு நிரப்பும் ஒரு இடைநிரவியாய் காண முற்படும்போது நிகழும் அவஸ்தைகளில் ஒன்று, ஒரு தேர்ந்த நடிகன் தொலந்து போவது. காமன் மேன் இல்லாமல் போனது கமலின் ஸ்டார் அந்தஸ்து காரணம் என்று நினைக்கிறேன், எந்த படத்தில் நீங்கள் கமலைப் பார்க்காமல், கதாபாத்திரத்தை பார்த்தீர்கள் சமீபமாய். நாம் கமலுக்கு கொடுத்திருக்கும் ஒரு தண்டனை இது, ஒரு நசுரூதின் ஷா, ஓம்புரி போல பொது ஜனமாய் வருவது கமலால் முடியாது, நாமும் ஏற்றுக்கொள்வோமா என்பது தெரியாது.

துரோக்கால், குருதிப்புனல் ஆனபோது ஒரிஜினல விட நல்லா இருந்தது என்று கோவிந்த் நிஹ்லானியே சொன்னார் என்று கமல் ஏதோ பேட்டியில் சொன்னார், ஆனால் துரோக்காலில் ஓம்புரியின் நடிப்பு ஒப்பிடமுடியாததாய் இருக்கும்.

தமிழில் உள்ள இரண்டு பெரிய ஸ்டார்களில் ஒருவர் இது போன்ற பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபடும்போது, கமலால் தன் கவசகுண்டலங்களை கழட்டி வைக்க முடியாமல் போய் விடுகிறது. கதை புதிது, களம் புதிது, இசை, தொழில் நுட்பம் எல்லாம் புதிது, மொந்தை பழைய கள்ளாய் கமல் என்ன செய்வது எல்லாக் கோனங்களிலும் கமல் தெரிகிறார். நதாசா புகைபிடிப்பது போல காட்டுவதால் என்ன கெட்டு விட்டது, நீங்கள் புகைபிடிக்கும் பெண்களைப் பார்த்தது இல்லையா, இது எனக்கு தெரிந்து ஒரு கலாச்சார அதிர்ச்சிக்காக சேர்த்த மாதிரி தெரியவில்லை, அது ஒரு கதாபாத்திரம் அது மாத்திரமே, எதையும் எதாவது என்று நினைத்து எப்போதும் ஏமாந்து கொண்டு இருக்கிறோம் எல்லோருமே.

காமராஜ் எனக்கு இந்த படத்தை நீங்கள் முழுமையாக அனுகவில்லை என்றே தோன்றுகிறது ஒரு அரைகுறையான முயற்சி என்று படுகிறது.

என் கருத்து என் கருத்து மாத்திரமே, நான் யாரையும் பிரதிநிதித்துவப்படுத்த இதை எழுதவில்லை.

அன்புடன்

ராகவன்

சம்பாரி மேளத்தின் உச்சமும், சில இழப்புகளின் மிச்சமும் – ஒரு பின்னூட்டம்

அன்புள்ள காமராஜ்,

நலமா, நீங்கள் தந்தித்தெரு ராகவனா என்ற உங்கள் கேள்விக்குப் பிறகு உங்களை காணோம், உங்களின் பதிவுகளிலும். மீண்டும் உங்களைப் பார்த்ததில் சந்தோஷம். மீண்டு வந்ததற்கு வந்தனங்கள் பல. உங்களின் இதற்கு முந்திய இரு பதிவுகளில் எனக்கு ஏனோ நீங்கள் இல்லாதது போல இருந்தது. சம்பாரி மேளத்தின் சத்தத்தை மீறி உங்கள் குரல் கேட்கிறது.

”பகலின் ஒப்பனைகள் கலைந்துபோய் நிஜ முகங்களோடு பயணப்படுகிற இரவு” ரொம்ப நிஜமான வார்த்தைகள்.

திருப்பத்தூரில் இருந்து காரைக்குடி வருவதற்குள் சில இடங்களில் கதை நொண்டி அடிப்பதாகத் தோன்றுகிறது.

”ஓவியர்களின் .... கேட்கலாம்” இந்த வரிகள் எனக்கு ஏதோ தொடர்பில்லாமல் ஒரு கன்னி (Link) தொலைந்தது போல் தோன்றுகிறது.

”பிரியமானவர்களின் பரிகசிப்பும் கேலியும்கூட மனிதர்களின் சந்தோசங்களை ஆழ வேர்விடச் செய்கிறது". நெகிழ்வான, செரிவான வார்த்தைகள், பிரியமுள்ளவர்கள் எது செய்தாலும் அழகாய் இருக்கிறது, வசைமொழிந்தாலும் வாழ்த்துகள் தான்.

உங்கள் எழுத்து நடை உங்களின் மிகப்பெரிய பலம் காமராஜ், அதுவும் அதன் ஒய்யாரம், அழகர் கோயில் மலைக்கோயிலில் இருந்து விறகு சுமந்து இறங்கும் பெண்ணின் ஒரே தாளகதி நடை.

வாழ்த்துக்கள்... நம்ம பக்கமும் வந்து ஏதாவது சொல்லிட்டு போறது!!

அன்புடன்



ராகவன்

Saturday, October 3, 2009

அப்பன் தாலாட்டு

கண்ணுமணி உறங்கு - உங்கப்பன்
கதை கேட்டு நீயுறங்கு
பொன்னுமணி உறங்கு - உங்கப்பன்
பொழ்சாய வருவாக
வின்னுமணி முளைக்க - உங்கப்பன்
வீதியில் வருவாக
கண்ணுமணி உறங்கு - உங்கப்பன்
கதை கேட்டு நீயுறங்கு

வண்டி மணியோசை - உங்கப்பன்
வாராக வெள்ளைத்துர
காளையார் கோயில் ரதம் - உங்கப்பன்
கண்ணு படும் நடையும்
தாயப் போல் பாட்டுபாடி - உங்கப்பனை
தாலாட்டி தூங்க வைப்பேன்
உன்ன போல் ஒரு புள்ள - உங்கப்பன்
ஊருக்கு மகராசன்

ஊஞ்சலில் ஒக்காத்தி - உங்கப்பன்
ஊருக்கத சொல்லுவான்
ஊவுன்னு கொட்டாட்டி - உங்கப்பன்
உச்சந்தலை தட்டுவான்
மெல்ல விடியுதங்கே - உங்கப்பன்
மேலாக்க தேடி தந்தான்
அள்ளி சொருகிடுவேன் - உங்கப்பன்
ஆயுச சேர்த்து இங்கே

ராசாவே கண்ணுறங்கு - உங்கப்பன்
ராவுல வந்துடுவான்
ராத்திரி முழிக்கொனும் - உன்னைப்போல்
ராசாவே பெக்கோனும்
தேனே நீ கண்ணுறங்கு - தெவிட்டா
தெள்ளமுதே உறங்கு
மானே நீ கண்ணுறங்கு  - மாடத்து
மதி போல நீயுறங்கு

ஆராரோ ஆரிராரோ  - ஆராரோ
ஆரிரி ராரிராரோ
ஆரிரி ராரிராரோ - ஆராரோ
ஆராரி ஆரிராரோ

(இருபது வருஷத்துக்கு முன்னாடி எழுதிய ஒரு பாடல், எனக்கு அப்போ பதினெட்டு வயசு இருக்கலாம், தீர்த்தக்கரையினிலே படத்தில் பஞ்சாயத்து சீனில் வரும் ஒரு பாடலின் மெட்டை மட்டும் எடுத்துக் கொண்டு, எழுதிய ஒரு தாலாட்டு பாட்டு. தனது காதற்கணவனைப் பற்றிய ரகசியப் பெருமை செரி நிலைகளை, விபரம் புரியாத குழந்தையிடம், பாடி குதூகலிக்கும் ஒரு காதற்தாய்!! அய்யோ கொல்றானே!)

மன்னிக்கவும் ஒரு தயக்கத்துடன் தான் பதிவிடுகிறேன்...

Saturday, September 26, 2009

காட்சி மயக்கம்

அருவி
தேநீர் குவளை
விளிம்பு
கிடைக்காமல்
குடிக்காமல் திரும்பினேன்

Thursday, September 24, 2009

கவிதை ஒன்று...


புணர்ந்து எறிந்த
பாலிதீன் பைகள்
பூமியின்
சுவாசத் துளைகள் அடைக்கும்

சுருங்கிய தூரம்
அடர் குளிர், வாகனப்புகை
காற்றில் விஷம் தடவி
விருந்து சமைக்கும்

உடைகளில் கதறும்
வர்ணங்கள்
ரத்த நாளங்களில்
அமிலம் ஏற்றும்

சுரண்டிய படுகைகள்
கிச்சு கிச்சு தாம்பாளம்
விளையாட்டில்
வருங்காலத்தை புதைக்கும்

சமூக அக்கறைக்
கவிதைகள் பக்கம் பக்கமாய்...
காகிதங்களில்
தூக்கிலிட்டு தொங்கும்
மரங்கள்!

இல், அறவாழ்வு










உன்
மௌனத்தையும்
காதல் பொதிந்த
வார்த்தைகளையும் நிராகரிக்கிறேன்

உன்
கவிதைகளையும்
காதோர கிசுகிசுப்பையும்
இடங்கையால் புறந்தள்ளுகிறேன்

உன்
பிடரி மயிர் ஒதுக்கி
பின்னங்கழுத்தில் இடும்
முத்தங்களில்
திராவகம் ஊற்றி பொசுக்குகிறேன்

உன்
தேநீர் ரசனைகளையும்
ஜன்னலோர நிலவுகளையும்
விழுங்கி சபிக்கிறேன்

உன்
வாழ்த்துக்களையும்
மலர்கொத்துக்களையும்
பாழ்வெளியில் எறிகிறேன்

நீ எப்போதாவது வீசும்
வசைசொற்க்களையும்
தகிக்கின்ற பார்வையையும்
எனது கேடயங்களாய் தரிக்கிறேன்

நீ மறந்த
பிறந்த தினங்களையும்
பரிசு பொருட்களையும்
திரட்டி கூராய் தீட்டி 
கொலை ஆயுதங்கள் ஆக்குகிறேன்

நீ ஓரிருமுறை
படுக்கையில் விலகி படுத்ததையும்
பார்ட்டியில் குடித்ததையும்
விஷமாக்கி கூர் ஈட்டிமுனை தடவுகிறேன்

வன்மம் வளர்த்து
போருக்கு சிலுப்பி
பூமியில் அறைகிறேன் எக்காளத்துடன் 

நீண்டு வளர்கிறது ஒரு நெடுங்கனவு....

Tuesday, September 22, 2009

களிநடைக்காலம் மறந்து...



கௌசல்யா அக்காவை முதன் முதலில் புலிகுத்தி கோயிலில் தான் பார்த்தேன். சிவராத்திரிக்கு குலசாமி கோயிலுக்கு போவது எங்கள் வீட்டில் வருஷாவருஷம் தவறாமல் போகும் வழக்கம் ஏதும் இல்லை. இந்த முறை கட்டாயம் வர்றம்னு, எங்க கோயில் பூசாரி தலைக்கட்டு வசூல் பண்ண வந்த போது சொல்லிட்டதால நாலு வருஷத்துக்கு அப்புறம் இப்ப தான் எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைச்சது. நாங்க எங்க குடும்பத்தோட மதுரையில இருந்து கார எடுத்துக்கிட்டு சிவராத்திரிக்கு ரெண்டு நாள் முன்னாடியே போய் சேர்ந்துட்டோம். அப்போ எங்க காம்பௌண்டில் குடியிருந்த சஞ்சீவி மாமா அவரோட ஒர்க்சாப்பில இருந்து ஒரு வெள்ளை அம்பாசிடர் காரை எடுத்து வந்திருந்தார். டீசலும், மூணு நாளைக்கு சாப்பாடும், வெத்தில பாக்கு போயிலைக்கு காசு கொடுத்துட்ட போதும் சஞ்சீவி மாமாவுக்கு. வண்டி ஓனரிடம் என்ன சொல்லிட்டு கார எடுத்துட்டு வந்தாரோ தெரியலை. மதுரைல இருந்து அறுவது கிலோமீட்டர்ல துலுக்கப்பட்டி சிமென்ட் பாக்டரி வரும் அதத்தாண்டி ஒரு வலது பக்க வளைவுக்குள் ஆறாவது மைலில் இருக்கிறது புலிக்குத்தி கிராமம். நிறைய ஜாதிக்காரங்களோட குலசாமிகளும் அங்கே தான் இருக்கு. எந்த சாமியும் ஒன்னோடோன்னு சண்ட சச்சரவு ஏதும் இல்லாம ஆண்டு வந்தனர்.

சிவராத்திரி நேரத்தில புலிக்குத்தி கிராமமே ஒரு புது வண்ணத்தில புரளும். செம்மண் கலரெல்லாம் போயிட்டு மஞ்ச கலரும், பச்சை கலரும் ஜாஸ்தியான மாதிரி தெரியும். பக்கத்து ஊர்கள்ல இருந்து நிறைய யாவாரிங்க கடை போடுறத்துக்கு வந்துடுவாங்க. இந்த வாட்டியும் நிறைய கடையா இருந்துச்சு கிராமத்துக்குள்ள நுழையும் போதே. குழந்தைங்க, பெரியவங்கன்னு எல்லாருக்கும் தேவையான எல்லா கடைகளும் புதுசா முளைச்சிருந்தது. விளையாட்டு சாமான் கடைங்க, டீக்கடைங்க, பஜ்ஜி, போண்டா கடைங்க, இளநீர், பதநீர், நொங்கு, குஞ்சலம், ரிப்பன், மைடப்பா, கேர்ப்பின், சீப்பு, சோப்பு டப்பா, சாந்து பொட்டு விக்கும் கடைங்க, சவ்வு மிட்டாய், ஐஸ் வண்டிங்க, பலூன்காரங்க, சாமிக்கு தேவையான, பூசைக்கு தேவையான சாமான், பூக்கடைங்கன்னு களை கட்டி இருந்துச்சு புலிக்குத்தியே. எல்லாருமே இங்க வாங்க, இங்க வாங்கன்னு கூப்பிட்டு தத்தமது வியாபாரத்தை பார்த்து கொண்டு இருந்தார்கள். எங்க போறதுன்னு தெரியாம சனங்கள் பெரும்பாலும் குமரிகளும், சிறுவர்களும் தான், எல்லாம் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு, பேருக்கு இது என்ன விலை, இது என்ன விலைன்னு கேட்டுக்கிட்டே திரிஞ்சாங்க. இந்த கிராமத்தை ஒட்டி ஒரு சின்ன ஆறு ஓடி கொண்டு இருந்தது, கன்னிசேரி என்ற பெயரில், எதன் கிளையாறோ தெரியலை, அப்பாவை கேட்டா சொல்வார், அநேகமா தாமிரவருனியா இருக்கணும். ஆத்துல தண்ணீர் இல்லாத சமயங்கள்ல, ஆத்துமணலில் ஊத்து பறிச்சுக்கிட்டு, வாளி வச்சு ஊத்தை வாடகைக்கு விட்டு இந்த கிராமத்தின் மிச்சமான ஊர்காரங்க காசு சம்பாதிப்பார்கள். மருதமலை மாமணியே, கற்பூர நாயகியே, விநாயகனே, ஆத்தாடி மாரியம்மா ன்னு தனக்கு விருப்பமான சாமியை குழாய் கட்டி கூப்பிட்டு கொண்டு இருந்தார்கள். தவில், தப்பு, உறுமி என்று மாடுகளையும், ஆடுகளையும், உடும்புகளையும் தோலாய் கட்டி அடித்து நாயனங்களையும், ஒத்துக்களையும் காற்றில் பரப்பினர். விரிதலையும், வேப்பிலையும், குலவை சத்தமும் பதினெட்டாம் படி கருப்பையும், சுடலைமாடனையும், முனிஸ்வரனையும், வீர சின்னம்மாளையும், முனிபைரவரையும் பலிக்கு ஏங்க வைத்து பந்திக்கு அழைத்தன. எல்லா கோயிலையும் ஏதாவது ஒரு சாமி ஏறி நின்னு குறி சொல்ல வாய் பொத்தி பக்த பங்காளிகள், சாமிக்கே என்ன வேணும்னு கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.

கௌஸல்யா அக்காவின் குடும்பமும், ஏனைய தாயாதிகளின் குடும்பங்களும், ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மெட்டடொர் சரக்கு வேனில் வந்து எங்களுக்கு முன்பாகவே சேர்ந்திருந்தனர். தாயாதிகளின் பாசமாகவும், நேசமாகவும் பந்தல் வேய்ந்து சிறுசிறு பங்காளி கசப்புகளை மறைத்து பந்தலில் வெயில், பொத்தல்களாய் விரவிக் கிடந்தது.  வெளிச்சப் புள்ளிகள் கோலமிடும் விரல்கள் தேடி பந்தலின் முகப்பு வரை பரவலாகி இருந்தது.  சிவராத்திரிக்கு முதன் நாளில் தான் ஆற்றில் இருந்து மண் எடுத்து வந்து எங்க குலசாமி அம்மனுக்கு முகவடிவு செய்து பூஜை செய்வார்கள். அதுக்கு இன்னும் ஒரு நாள் இருந்தது, சிவராத்திரி அன்றைக்குத்தான் எல்லா தலைக்கட்டுகாரர்களும் ஒன்றாக சேர்ந்து பெரிய பூஜையாப்போடுவார்கள். மறு நாள் கிடாவெட்டு நடந்து கறிசோறு போடும் சம்பிரதாயம். அதுவும் தாயாதிகளின் கோயிலுக்கு சம்பந்தகாரர்கள் வந்துவிட்டால் எல்லா பங்காளி பெருசுகளும், இளவட்டங்களும் சேர்ந்து அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும். பொண்ணு கொடுத்து பொண்ணு எடுப்பதற்கான மரியாதை, கரும்பு, பூ, பழம் எல்லாம் வைத்து வரவேற்க வேண்டும் என்பது ஒரு ஏற்பாடு. அவர்கள் கோயிலுக்கு நாங்கள் போகும்போதும் இது போல செய்வதுண்டு.

கௌஸல்யா அக்கா எனக்கு பெரியம்மா மகளாக இருந்தாலும், எங்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் பெரிதாய் பழக்கவழக்கமில்லை. அவங்கப்பா பாம்பேல ஒரு சேட் கிட்ட டிரைவரா வேலை பார்த்து கை நிறைய சம்பாதித்து சொந்தமாய் காரைவீடு கட்டி வாழ்ந்தவங்க, அந்த காலத்திலேயே. (எங்க அப்பா கைய ஊனி கரணம் பாயற வரை, நாங்க வாழ்ந்தது சின்ன கூரைவேய்ந்த வீடு தான் என்று எப்போதும் சொல்வார் ஆக காரைவீடு அதிசயமான விஷயம் அப்போது). அவரை பாம்பே பெருமாள்னு சொன்னாதான் ஊருக்குள்ள தெரியும். அவரும் அப்படி தான் அறிமுகம் செய்து கொள்வார். அவரோட மூத்தமகனுக்குக் கூட பாம்பே கண்ணன்னு தான் பேரு, அவரும் பாம்பேல கோத்தாரி மில்ஸ் முதலாளிகிட்டதான் டிரைவரா இருக்கார். மத்ததெல்லாம் பொட்டப் பிள்ளையா போயிடுச்சேன்னு அவருக்கு கவலை, இல்லேன்னா எல்லாரையும் பாம்பேல டிரைவரா ஆக்கி சாரதி பரம்பரையாய் மாற்றியிருப்பார்னு ஊருக்குள்ள பேசிக்குவாங்க. கௌசல்யா அக்கா, பாம்பே பெருமாளுக்கு ரெண்டாவது பொண்ணு, மூத்தவங்க கலாக்கான்னு, சாத்தூர்ல கட்டிக் குடுத்திருக்காங்க, அவங்க வீட்டுக்காரரு பேனா நிப்பு கம்பெனி வச்சிருக்கார். அவங்களுக்கு அடுத்தவ தான் கௌஸல்யா அக்கா. அவளுக்கு அடுத்து மோகனா மற்றும் கல்யாணி என்ற விவரங்கள் பின்னால் கௌஸல்யா அக்காவே சொல்லியது. கார விட்டு இறங்கி, நாங்க எல்லோரும், சஞ்சீவி மாமா தவிர்த்து, எங்க தாயாதிகளின் பந்தலுக்கு நுழையும்போதே ஏகப்பட்ட விசாரிப்புகள், என்னப்பா வெங்கிடுசாமி! எத்தனை வருசம் ஆச்சு உனக்கு வீரசின்னம்மாள பார்க்க வர்றதுக்கு. இவந்தான் பெரியவனா என்று என்னைப்பார்த்து கேட்க, ஆமா அண்ணெ, இவன் தான் இங்கிலீஷ் மீடியத்தில படிக்கான். அப்படியா? விச் கிளாஸ் ஆர் யூ ரீடிங்னு அவரு கேட்க, நானும் செவன்த் என்று பதில் சொல்ல, அட்ராசக்கை, இவன கலெக்டரா ஆக்கிடு வெங்கிடுசாமி! பய சூட்டிகையா இருக்கானே! என்று வியப்பைக் காட்டினார். நான் இது வரைக்கும் எல்லா சப்ஜெக்டுகளும் பாஸானதே இல்லை என்று அவருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. பாஸும், ஹரியும் (என் சகோதரர்கள்) பந்தலுக்குள் இருந்த இரண்டு பெண் குழந்தைகளுடன் அதற்குள் சிநேகமாகி விளையாட போய் விட்டார்கள். எங்க அப்பாவும், அவர் வயதொத்த பழைய கூட்டாளிகளை பார்த்தவுடன் அவர்களுடன் பேசச் சென்று விட்டார். அம்மா எங்க துணிமணிகள் கொண்டு வந்த பைகளையும், ஒரு தோல் பேக்கையும் என்னிடம் தந்து, கௌசல்யா அக்கா இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் இடம் இருப்பதை சுட்டிக்காட்டி, அங்க போயி இரு, இந்தா நான் வாரேன். அம்மாவின் ஒன்று விட்ட சகோதரர்களின் குலசாமி கோயிலும் இங்கேயே இருப்பதால், அவளுடைய உடன் பிறவா பிறப்புகளைப் பார்க்க கிளம்பி விட்டாள். எனக்கு எல்லோருமே என்னை தனியா விட்ட மாதிரி இருந்தது. அங்க என் வயசு பசங்களே இல்லாத மாதிரி இருந்தது. என்னையே பார்த்துக் கொண்டிருந்த கௌஸல்யா அக்கா, தன்னை நோக்கி வரும்படி என்னை அழைத்தாள். எனக்கு பார்த்தவுடனே கௌஸல்யா அக்காவை பிடித்துப்போனது. நானும் எல்லா சுமையையும் தூக்கிகிட்டு அவளுக்கு அருகே போனேன். கீழே விரித்திருந்த தார்ப்பாலினை சீராக நீவிவிட்டு, மண்ணை விலக்கி என் கையைப்பிடிச்சு, அருகே இருக்க வைத்தாள். எங்க பைகளுக்கும், தோல் பைக்கும் தோதா ஒரு இடம் பார்த்து வைக்கச் சொன்னாள். நான் அவ சொல்றத எதையுமே மறுக்காம செஞ்சிட்டு, அடுத்து என்ன என்பது போல பார்த்தேன்.

அப்போதான் நான் கௌஸல்யா அக்காவை முதன் முதலாப்பார்த்தேன். நீள முகத்தில், மாநிறமாய், மெலிதான தெத்துப்பல், முன் முடியை குட்டையாக வெட்டி விட்டு, முன்னால் நெளித்து விட்டு ஸ்டைல் பண்ணியிருந்தாள். நீலத் தாவனியும், பச்சைக்கலர் பாவாடையும், அதற்கேற்றாற் போல ரவிக்கையும் அணிந்திருந்தாள். கழுத்தில் ஒரு கருப்புக் கயிற்றில் ஒரு முத்து போன்ற ஒரு டாலர் கோர்த்திருந்தது. அவளுடைய உடைக்கு பொருத்தமான கலரில் கண்ணாடி வளையல்கள் அவ்வப்போது சப்திக்க அணிந்திருந்தாள். அப்போதான் என் பெயரைக் கேட்டாள், நான் சொல்லும் முன்பாகவே, சீனு தானே! எனக்குத் தெரியும், ரவி, சேதுவின் தாய் மாமா பையன், கரெக்டா! என்று என்னை வியக்க வைத்தாள். நான் உங்களுக்கு எப்படி தெரியும்னு கேட்டப்பா, ரகசியம்னு கண் அடித்து சிரித்தாள் மேல் நோக்கி. என்னை இதுவரை யாருமே சீனுன்னு கூப்பிட்டதில்லை, சீனி என்று பள்ளியிலும், என் வீட்டிலும், கருவாப்பையலே என்று பெத்த நாயினாவும், கருவண்டு என்று பிச்சம் நாயுடுவும், ஜெயாத்தையும் கூப்பிடுவார்கள். கௌசல்யா அக்காதான் முதன் முறையாக என்னை சீனு என்று கூப்பிட்டது, அதுவும் அவளின் நுனி நாக்கு, பல்லில் பட்டு காற்றுடன் சீனு என்று சொல்வது அழகாகவும், சந்தோஸமாகவும் இருந்தது. அவளுடன் இருந்த மற்றவர்களையும் அறிமுகப்படுத்தினாள், இது மோகனா, இது பெரிய சாந்தி, இது குட்டி சாந்தி, இது கலா, இது கல்யாணி, இது கோவில்பட்டிங்கிற செல்வம், எல்லோரும் என்னை வேற்று கிரகத்து மனுசனை பார்ப்பது போல பார்த்தார்கள். நான் எல்லோரையும் பார்த்து சிரித்தேன். கோவில்பட்டி தான் முதல்ல ஒட்டிக்கிட்டான்.

வெயில் அதிகமாக இருந்தது, காற்றும் இல்லாமல் பந்தலே புழுங்கியது, தாகமாகவும் இருந்தது, வீட்டில் இருந்து பாட்டிலில் எடுத்து வந்த தண்ணீரைத் தேடி எடுத்து குடித்து விட்டு என்னையே பார்த்துக் கொண்டு, ரொம்ப தண்ணீத் தாகமா இருக்கா, சிவராத்திரி அன்னைக்கு ராத்திரி மழ பெய்யும், அப்புறமா சூடு தனிஞ்சுரும், என்று பரிவாய், இறகு வருடலாய் பேசினாள்.  இந்த விநோத மௌனத்தில் ஆழ்ந்து  இருந்தவர்களை கலைப்பதற்காக, கௌசல்யா அக்கா, வாங்க எல்லோரும் போய் வெயிலுக்கு இதமா சேமியா போட்ட ஐஸ் வாங்கி சாப்பிடலாம், என்கிட்ட காசு இல்லக்கான்னு நான் சொல்ல பரவாயில்ல எண்ட்ட இருக்கு. என்று என்னுடன் அந்த குட்டி பட்டாளத்தையும் கூட்டிக்கொண்டு வெளியே கோயிலை நோக்கிச் சென்றாள். அவள் எனக்கு ஐஸ் வாங்கி குடுப்பதற்காகவே எல்லோரையும் கூட்டிச்செல்வதாகப் பட்டது. அப்பா, இன்னும் யாருடனோ, ஒரு வேப்பமரத்தின் கீழே நின்று பேசிக்கொண்டிருந்தாள். அம்மாவைக்கானோம், ஹரியும், பாஸ்கரும் என்னை ஐஸ் வண்டி பக்கத்தில் பார்த்ததும், அவர்களுடைய பிரிய தோழிகளை விட்டுவிட்டு ஓடிவந்து விட்டார்கள், சீனி எனக்கும் ஐஸ் வாங்கிக்கொடுன்னு, ரெண்டு பேரும், நான் என்கிட்ட காசு இல்லடா, இந்த அக்கா தான் வாங்கிக் குடுக்குறாங்கன்னு சொல்ல கேட்கிறமாதிரி தெரியலை, ஹரி அழவே ஆரம்பிச்சுட்டான். கௌசல்யா அக்கா, எல்லாருக்கும் நான் வாங்கித் தரேன்னு என்னைப் பார்த்து குனிந்து, கண்ணத்தை பிடித்து சொன்னாள். எனக்கு அவளைக் காலோடு கட்டிக் கொள்ளத்தோன்றியது, கையை மட்டும் பிடித்துக் கொண்டு, சேமியா ஐஸ், சவ்வரிசி ஐஸ் என்றும், அவரவருக்கு பிடித்த கலரில் ஐஸ் வாங்கிக் கொண்டோம், கௌசல்யா அக்காவும், பெரிய சாந்தி அக்காவும், எதுவும் வாங்கிக் கொள்ளவில்லை, அக்கா உங்களுக்குன்னு கேட்டப்ப, நாங்க இப்பதாண்டா ஐஸ் சாப்பிட்டோம், என்ன சாந்தி! என்றாள் எனக்கு நம்பிக்கையில்லாததை கண்டு, நாக்கை நீட்டி பார்த்தியா, ரோஸ் கலர்ல இருக்கு என்று சமாதானம் சொன்னாள். எனக்கு என்னவோ, கூட ரெண்டு டிக்கெட் சேந்துட்டதால தான் அவங்க ரெண்டு பேருக்கும் ஐஸ் இல்லாம போச்சுன்னு தோன்றியது. அப்பாட்ட காசு கேட்டு அக்காவுக்கு ஐஸ் வாங்கித் தரனும்னு நினைத்துக் கொண்டேன்.

கௌஸல்யா அக்கா என் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு குனிந்து கொஞ்ச நேரம் ஏதாவது விளையாடலாமான்னு கேட்க, என்ன விளையாட்டு விளையாடலாம் என்று எல்லோரையும் கேட்டாள். கல்லா, மண்ணா, கள்ளன் போலீஸ், குலைகுலையா முந்திரிக்கா, கண்ணாமுச்சி ரே ரே, நொண்டி, ஸ்கிப்பிங் என்று ஆளுக்காள் ஒவ்வொரு விளையாட்டா சொல்ல, கடைசியில் கல்லா, மண்ணா விளையாடிவிட்டு அப்புறமா, நொண்டி விளையாடலாம்னு கௌஸல்யா அக்கா சொல்ல, எல்லோரும் தலைவர் வார்த்தைக்கு கட்டுப்பட்ட தொண்டர்களாய், சரிக்கா என்று ஒரே குரலில் சொன்னோம், பாஸ்கர் மட்டும் ஸ்கிப்பிங்கும் விளையாடலாங்க்கான்னு கெஞ்சுவது போல கேட்க, கௌஸல்யா அக்கா என்னை பார்த்து ஸ்கிப்பிங் விளையாடலாமான்னு கேட்க நானும் சரியென்று சொன்னேன். எங்களையெல்லாம், கோயிலுக்கு பின்னால் உள்ள பொட்டலுக்கு அழைத்துச் சென்றாள் கௌஸல்யா அக்கா, அங்கு ஒரு பெரிய ஆலமரம், நிறைய விழுதுகளுடன், ஊஞ்சல் ஆடுவதற்கு வசதியாகவும் இருந்தது. யாரோ அதில் வாகாக கயிறு கட்டி ஒரு துண்டு மரத்தை ஊஞ்சலின் அமைப்பில் கட்டியிருந்தார்கள்.  குட்டி பட்டாளம் அதைப்பார்த்தவுடன் அதில் விளையாட போய் விட்டது.   மற்ற எல்லோரும் நான் உட்பட அக்காவின் உத்தரவுக்காக காத்திருந்தோம்.  அந்த ஆலமரத்திற்கும் பின்னால், இந்த வெயில் காலத்திலும் வற்றாமல் ஒரு ஊருனி நிறைய தண்ணீருடன் இருந்தது, களக், களக் என குதிக்கும் மீன்களுடன். இரண்டு பக்கங்கள் மட்டும் படித்துறை போல் அமைப்பு இருந்தது, ஆலமரத்தின் வலதுபக்கத்தின் எதிரே, ஒரு படித்துறையில் நிறைய பேர், குளித்துக் கொண்டும், துவைத்துக் கொண்டும் இருந்தனர்,  ஆலமரத்தின் பின்னால் இருந்த படித்துறையில் யாரும் இல்லை, ஒரே ஒரு கிழவியைத் தவிர.  ஊருனியைச் சுற்றி அங்கங்கே இடைவெளி விட்டு மரங்கள் இருந்தன, பெரும்பாலும் புளியமரங்கள், நம்பர் போட்டு, இரண்டு நவ்வாப்பழ மரமும், சில புங்க மரங்களும் இருந்தன, எனக்கு புளிய மரத்தைத் தவிர வேறு எந்த மரமும் சரியாக தெரியவில்லை, கௌஸல்யா அக்கா தான் என்னென்ன மரங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். புளிய மரங்களைப் பார்த்ததும், ரேணுகாக்கா சொல்லிய பேய் கதைகள் ஞாபகம் வந்தது.  கௌஸல்யா அக்காவிடம் என் பயத்தைப் பற்றி சொன்ன போது, அவள் குலதெய்வம் வீரசின்னம்மா இருக்கிற எடத்தில எந்த பேய் பிசாசும் வராது பயப்படாதே என்று சொன்னாள் ஒரு தேவதையாய். அங்கு சென்ற பிறகு தான் தெரிந்தது, கல்லா, மண்ணா விளையாட அது தோதாய் இருக்காது என்று, ரொம்ப ரொம்ப தூரத்தில் தான் சில மண்டபங்களில் படிக்கற்கள் இருந்ததால், கல்லா மண்ணாவை கைவிட்டு, நொண்டி விளையாட முடிவு செய்தாள் அக்கா, எனக்கு நொண்டி விளையாடுவது பிடிக்கும், நாங்க எங்க காம்பவுண்டில் லீவு நாட்களின் போது, இது போல நொண்டியும், சொட்டாங்கல்லும் தான் விளையாடுவோம், எப்போதாவது, தாயமும் விளையாடுவது உண்டு. திடீரென்று ஜெயந்தியின் ஞாபகம் வந்தது, அவளும் வந்திருந்தா நல்லா இருந்திருக்கும், ஆனா அவங்க மாமா தான் அவளை விட மாட்டேன்னு சொல்லிட்டார்.  அதுவும் நல்லது தான் இல்லாட்டி, கௌஸல்யா அக்கா கூட பழகி இருக்கவே முடியாது. ஜெயந்தி அவ கூடவே இல்லேன்னா அப்புறமா பேசவே மாட்டா, காம்பவுண்டில் எனக்கு ஜெயந்தி தான் உற்ற தோழி, புத்தகங்கள் படிப்பதும், அதற்காக சண்டையிடுவதும் அவளுடன் தான். போன வருஷம் நாங்கள் சித்திரை திருவிழா, பூப்பல்லக்கின் போது, அவளுடன் ராட்டினம் சுற்றியதும், நின்றிருந்த டிராக்டர் டிரைலரில் மறைவாய் விளையாடியதும் ஏனோ ஞாபகம் ரசமாய் வழிந்தது. இந்த அக்கா எவ்வளவு பாசமா இருக்காங்க, இவங்கள மதுரைக்கு நம்ப வீட்டுக்கு லீவுக்கு வரச்சொல்லணும்.

எல்லோரும் கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு, கோயிலைத்தாண்டி மீண்டும் பந்தலுக்கே வந்துவிட்டோம். அப்பா இன்னும் வந்திருக்கவில்லை, அம்மா, எங்களின் பைகள் வைத்திருந்த இடத்திற்கு அருகில் உட்கார்ந்து, சுப்பு சின்னம்மா, முனியம்மாவுடனும் பேசிக்கொண்டு இருந்தாள். எங்களைப்பார்த்ததும் எங்கடா போயிட்டு வர்றீங்க. கௌசல்யா அக்காகூட போய் விளையாடிட்டு அப்படியே ஐஸ் தின்னுட்டு வர்ரோம். யாரு வாங்கிக்குடுத்தா, நான் தான் சின்னம்மா வாங்கிக் குடுத்தேன், நான் தீப்பெட்டி ஒட்டி சேர்த்த காசுல தான் வாங்கிக்குடுத்தேன்னு நெஞ்சில் கை வைத்து பெருமையாய்ச் சொன்னாள் அக்கா.  உடனே என்னோட அம்மா, அவளுடைய பர்ஸிலிருந்து காசு எடுத்துக் குடுத்தபோது அவள் வாங்கிக் கொள்ளவில்லை. என் தம்பிங்களுக்கு தானே வாங்கிக் குடுத்தென், பரவாயில்ல சின்னம்மா, என்று என் தலைமுடியைக் கோதிக் கொண்டே பேசிக் கொண்டிருந்தாள். இவ எனக்கு அக்காவா பொறந்திருக்க கூடாதான்னு யோசிச்சுக் கொண்டிருந்தேன். சிவராத்திரி முடியும் வரை கௌஸல்யா அக்காவுடன் தான் இருந்தேன், அவளும் எங்கே போனாலும் என்னை உடன் அழைத்துச்சென்றாள். ஆத்துக்கு குளிக்கப் போகும்போது, கோயிலுக்கு அம்மனின் முகவடிவு கொண்டு செல்லும்போது, முளப்பாரி எடுத்துச்செல்லும்போது, பெரிய பூஜை நடக்கும்போது, மூக்கம்மா சின்னம்மாக்கு சாமி வந்து புருஷன போடா, வாடான்னு மரியாதையில்லாமா ஆத்தாவா வைஞ்சபோது, ராஜலச்சுமி மயினி மேல மாரியம்மா ஏறி வந்து கல்யாண ஆகாத பெரிய சாந்திக்கு, கிழக்க இருந்து சம்பந்தம் வரும்னு துன்னூரை அள்ளி மூஞ்சில எறிஞ்சபோதுன்னு எல்லா நேரத்திலும் நான் அக்கா கூடவும், அக்கா எங்கூடவும் தான் இருந்தோம். எனக்கு அவங்களுக்கு சாமி வரும்போதெல்லாம் பயமா இருக்கும், அக்காவை இறுக்கி பிடிச்சுக்குவேன், அவளும் பயப்படாத சீனு, இது சாமி தான், பேய் வந்தாலும் இப்படி தான் ஆடுவாங்க, ஜெயாத்தைக்கு பேய் பிடிச்ச போது அவங்க இப்படி தான் ஆடினாங்க, மந்திரவாதியெலாம் வந்து பூஜை பண்ணாதான் அடங்கும் என்று எனக்கு தெரிந்ததை சொன்னேன். கௌஸல்யா அக்கா அதற்கு, கோயில்ல சாமி இருக்கிறதுனால பேய் வராதுன்னு சொன்னேன்ல,  வந்தா அது சாமி தான்னு எளிமையாக விளக்கினாள், அதுக்கப்புறம் எனக்கு பேய்ப் பயம் வரலை, சில சமயம் சாமி வந்து வேப்பிலை வச்சு அடுத்தவங்கள் அடிக்கும்போது மட்டும் சிரிப்பா வந்துச்சு, அப்டியெல்லாம் சிரிக்ககூடாது, சாமிக்கு கோவம் வந்துடும் என்று கண் விரிய அவங்க ஊரில் நடந்த மாரியம்மாவின் கோபக்கதையெல்லாம் சொல்வாள்.

சிவராத்திரி முடிஞ்ச பிறகு ஊருக்கு கௌஸல்யா அக்காவை பிரிஞ்சு போகனுமேன்னு நினைக்கும்போதே அழுகை வர்றமாதிரி இருந்தது. அக்காவை நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு போயிடலாமுன்னு அப்பாட்ட கேட்டுப் பார்க்கலாமான்னு எனக்கு தோனிச்சு, அப்பாட்ட கேட்டபோது நம்ம கட்டில்ல எடம் பத்தாதேடான்னு சொன்னார். நான் வேனா கட்டிலுக்கு அடியில படுத்துக்குறேன்னு சொன்னேன். அவங்கம்மா அப்பா விடனும்ல, அதும்போல அது வீட்ல இருந்து தீப்பெட்டி ஒட்டி சம்பாதிக்கிற பிள்ளை, மதுரைல தீப்பெட்டி ஒட்டுற வேலை செய்ய முடியாதே, அவ வீட்ல இருந்தா அவங்கம்மாவுக்கு உதவியா, ரெண்டு காசு சம்பாதிச்சுட்டு இருப்பா, அத கெடுக்கனுமா உனக்கு. நீ ஊருக்கு போகும்போது அவங்க வீட்டுக்கே போய் இரு, விளையாடு என்று சமாதானம் சொன்னார். எனக்கு சீட்டுக்கட்டுல கழுதை விளையாட்டு, ரம்மி விளையாட்டு என்று இந்த மூன்று நாட்களில் கற்றுக்கொடுத்துவிட்டாள். கோவில்பட்டி மாத்திரம் கொஞ்சம் பொறாமையா பாப்பான், ஏலே கொடுத்து வச்சவம்ல நீ…. கௌசல்யா அக்கா உனக்கு ஏதாவது வாங்கி கொடுத்துட்டே இருக்கு என்று புலம்புவான். கௌஸல்யா அக்காக்கும் என்னைப் பிரிவது சங்கடப்படுத்தி இருக்க வேண்டும், ஆனாலும் அவள் சமாளித்துக் கொண்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் வரும்போது என் வீட்டிற்கு வரவேண்டும், நீ வரலேன்னா, அவ்வளவு தான் பாத்துக்கோ, நான் உன்கூட பேசவே மாட்டேன், அத்தனை அழகாக, நுனி நாக்கை பல்லில் தட்டி தட்டி அவள் பேசியது, தலை சாய்த்து என்னை பார்த்தது, எனக்கு மேலும் அழுகை வர வைத்தது. கௌஸல்யா அக்கா எல்லாமுமாய் நிறைந்து நின்றாள், என் அப்பாவிடமும், சித்தப்பா, சீனுவை பரீட்சை லீவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பி விட்டுடனும் என்று உறுதி வாங்கி கொண்டாள். அவர்கள் ஊருக்கு செல்ல வேண்டிய மெட்டடோர் சரக்கு வேன் எல்லோரையும் ஏற்றிக்கொண்டு கிளம்பத் தயாரானது. கௌஸல்யா வேனில் பிடித்துக் கொள்ள தொங்கிய கயிற்றைப் பிடித்துகொண்டே, சீனு லட்டர் எழுது, 113, ஆராய்ச்சிபட்டி பிள்ளையார் கோயில் தெரு, ஸ்ரீவி என்று அட்ரஸ் சொல்ல நானும் மனதில் குறித்துக்கொண்டேன், ரவியும் அதே தெருவில் இருப்பதால், டோர் நம்பர் மட்டுமே ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியிருந்ததால், இலகுவாய்ப் போனது, எனக்கு அழுகையாய் வந்தது, கௌஸல்யா அக்காவின் வெம்மை, ப்ரியம், ஒரு மெல்லிய பாசிப்பயறும், சோப்பும் கலந்த வாசம் என்று என்னைச் சுற்றி ஒரு கௌஸல்யா பற்றிப் பெருகியிருந்தாள்.

கல்லூரி முதலாம் இரண்டாவது வருஷம் படிக்கும்போது கௌஸல்யா அக்காவுக்கு கல்யாணம் நிச்சயம் ஆனது. கௌஸல்யா அக்காவின் அம்மா எங்கள் வீட்டுக்கு வந்து கல்யாணப்பத்திரிக்கை கொடுத்ததாங்க, அம்மா சொன்னாள். கௌஸல்யா அக்காவின் ஒன்று அல்லது இரண்டு விட்ட தாய்மாமனை கல்யாணம் செய்து கொண்டாள். கௌஸல்யா அக்கா. அவருக்கு அவளை விட அதிகம் வயசாய்த் தெரிந்ததாகச் சொன்னாள், திருத்தங்கலில் கார் டிரைவராக (அவருமா?) இருப்பதாகவும், சொந்தமாக இன்னும் கொஞ்ச நாட்களில் கார் வாங்கி விடுவதாகவும் கல்யாணத்திற்கு சென்றிருந்த என் அம்மாவிடம் கூறியிருக்கிறாள். உன்னைப்பத்தி தான் ஓயாம கேட்டா, நான் தான் உனக்கு செமஸ்டர் அது, இதுன்னு சொல்லி சமாளிச்சேன், அவ மாப்பிள்ளைட்ட கூட உன்னைப்பத்தி சொல்லிக்கிட்டே இருந்தாள், நீ வந்திருக்கலாம்டா, பாவம் ரொம்ப ஏமாந்து போயிருப்பா, மணமேடைவிட்டுட்டு என்னை கவனிக்க வர்றா, எனக்கு தான் ஒரு மாதிரியா இருந்தது, என்று அம்மா, கௌஸல்யாவின் கல்யாணத்தில் இருந்து வந்ததில் இருந்து அம்மா அவளைப்பற்றியே பேசிக்கொண்டு இருந்தாள். எனக்கு கல்யாணத்திற்கு நான் ஏன் போகாமல் இருந்தேன் என்று புரியவில்லை. மதுரையில் இருக்கும் அவள் தாய்மாமன் வீட்டுக்கு வரும்போது என்னைப் பார்க்க வந்திருக்கிறாள், வழக்கம்போல நான் இல்லாதது, அவளுக்கு ஏமாற்றமாய் இருந்தது போலும். எனக்கும் அவள் எப்படி இருக்கிறாள் என்று பார்க்க முடியவில்லையே என்று கொஞ்சம் வருத்தமாய் இருந்தது. எப்படி இருந்தாள் என்று அம்மாவிடம் கேட்டதற்கு, எப்பவும் போல தான், துறுதுறுன்னு, நாக்க நீட்டி நீட்டி பேசிக்கிட்டு, சின்னம்மா, திருத்தங்கலுக்கு வாங்க, சீனுவ கூட்டிக்கிட்டு, நாங்க கார்ல தான் வந்திருக்கோம், சீனு சீக்கரமா வந்துட்டா, எங்க மாமாவீட்டுக்கு வரச்சொல்லுங்க சின்னம்மான்னு, ஒரு சூறாவளிபோல வந்தா, போயிட்டா, நீ கொஞ்சம் சீக்கிரமா வந்திருந்தா, அவ மாமா வீட்டுக்காவது போயி பார்த்திருக்கலாம், இப்படி விளக்கு வச்சு வந்தேனா, அவ இன்னேரம் போயிருப்பா, கௌஸல்யா அக்கா, கௌஸல்யா அக்கான்னு சொல்லிக்கிட்டே இருப்ப, இப்ப என்னடா ஆச்சு, அவள பார்க்கக்கூட போக மாட்டேங்கிற, நான் சொல்றதையும் அக்கறையா கேட்க மாட்டேங்கிற! என்று சலித்துக் கொண்டாள்.

பாஸ்கர், சொந்தத்திலேயே என் மாமன் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து கொண்டான். அவன் கல்யாணத்திற்கு வந்திருந்தாள் கௌஸல்யா அக்கா, அவள் மகன் சீனுவுடன், என்னைப்பார்த்ததும், ஓடி வந்தாள், பார்த்தியாடா, 10 வருசம் கழிச்சு ஒன்னப்பிடிச்சிட்டேன், எப்படி இருக்கடா தங்கம், ஒன் மிஸ்ஸஸ் எங்க? ஜம்முன்னு இருக்கியேடா, அழகான்னு, திருஷ்டி வழித்தாள். டேய் மாமாவப் பார்த்தியா, மாமாவுக்கு ஒன் பேர் தாண்டா, என்று அவள் பையனிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தாள். மாமா மாதிரி நல்லா படிச்சேன்னா, மாமா அவனை மாதிரியே ஒரு வேலை வாங்கி குடுப்பான், குடுப்பதானே என்று என்னிடம் உறுதி செய்து கொண்டாள். ஒன்னப் பார்க்கத்தான்டா வந்தேன், பாஸ்கர் கல்யாணம் ஒரு சாக்கு, பாஸ்கர் கல்யாணத்திற்கு வந்தேன்னு தான நினச்ச, அவன் வந்து பத்திரிக்கை வைக்கும்போதே சொல்லிட்டேன், சீனு வருவானான்னு, என்று என்னை ஒரு கையால் அனைத்தபடி பேசிக்கொண்டே இருந்தாள், சீனு என்கிற அவளுடைய பையனும், நானும் அவள் பேசுவதைக்கேட்டுக் கொண்டே இருந்தோம். திருத்தங்கல் பற்றியும், மாமாவையும் பற்றியும், விறகுக்கடை பரமசிவம், நாங்கள் புலிக்குத்தியில் சுற்றியதையும் என்று சம்பந்தமில்லாமல் கதைகள் பேசிக்கொண்டே இருந்தாள். என் மனைவி வந்து தோள் தொட்டழைக்க, கௌஸல்யா அக்காவை அறிமுகம் செய்தேன், என்னோட பெரியம்மா பொண்ணு, நம்ம கல்யாணத்துக்கு ஏன் வரலை என்று அசந்தர்ப்பமாக கேட்டாள். சீனுவுக்கு என் மேல ஏதோ கோபம், அதான் அவன் எனக்கு பத்திரிக்கையே அனுப்பவில்லை என்று கௌஸல்யா அக்கா முகத்தை பாவமாய் அழகு காட்டினாள். எக்ஸ்க்யூஸ் மீ என்று என் மனைவி கௌஸல்யா அக்காவிடம் தொந்தரவுக்கு வருந்தி அழைக்க, போயிட்டு வா சீனு, நான் சாயந்தரம் வரை இருப்பேன், என்று வழி அனுப்பினாள் கண் கலங்கிய படியே! எனக்கும் அழுகை வந்தது, என் மனைவிக்குப் புரியவில்லை.

Thursday, September 17, 2009

மணிகண்டனுக்கு...

யாதும் ஊரே


06-08-2009

உனக்கு நீண்ட நாட்களாய் கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன், இப்போது நேரம் வாய்த்திருக்கிறது என்று நினைக்கிறேன். முடிக்கும் வரை நிச்சயம் இல்லை என்றாலும் ஆரம்பிக்க நேரம் வாய்த்ததே ஒரு நல்ல அறிகுறி தானே! ” a well begun task is half completed” என்று சுலபமாய் சொல்லி விடலாம் தானே! படிக்க நேரம் வாய்க்கிறது, அதை சுவாரசியமாய் பேசுவதற்கு, அசை போடுவதற்கு பிரத்யேக நேரமில்லாவிட்டாலும், படிக்கும் போதே சிலிர்க்கவும், வியக்கவும், சீந்தவும் முடிகிறது. சில சமயம் படிக்கின்றபோது வாய்க்கின்ற முழுமை இது போன்ற அலசி, ஆராயும் புத்தியில் அகப்படாமல் போனாலும் ஒரு அரைகுறையான திருப்தியை கொடுக்கிறது.

உனக்கு எதைப்பற்றியும் குறிப்பாக பேசாமல் இதுபோல் வெட்டிச்சரடு விடுவது (அல்லது ஜல்லி அடிப்பது) எந்தவித முகாந்திரமும் இல்லாமல் செய்யமுடிகிறது. ஏன் எழுதுகிறேன் என்று தெரியாமல், கொஞ்ச நேரம் முகத்தைப்பார்த்துக் கொண்டு, விரல் நகங்களைப் பார்த்துக் கொண்டு, மோட்டு வளையத்தை பார்த்து கொண்டு தேமேன்னு உட்கார்வது போல, ஒரு மோனைத்தவம் (!?) போல வாய்க்கிறது எனக்கு. சொன்னா யாராவது இல்லை எல்லோருமே சிரிப்பார்கள்! எனக்கு கதை சொல்லிகளுக்கான அடையாளங்கள் இல்லை தகுதிகள் இருக்கலாம், கதைசொல்லியாக மாற வேண்டும் என்ற உந்துதல், ஆசை, அடிமனதில் ஒரு undercurrent போல ஓடிக்கொண்டு இருக்கலாம், அதுமேல வர்றதுக்குள்ள ஏதேதோ பூதம் கிளம்பி புதையலை மறைச்சுடுது.

கதை சொல்லிகள், கி.ரா. மாதிரி யாராவது ஒரு ஆளு கதை சொல்ல முடியுமான்னு தெரியலை. எனக்கும் வண்ணதாசன், நாஞ்சில் நாடன், இரா.முருகன், வண்ண நிலவன் இவர்கள் எல்லோருமே ஒரு தேர்ந்த கதைசொல்லிகளின் இலட்சணத்தை கொண்டிருக்கிறார்கள். கோணங்கி பற்றிய எஸ்.ரா வின் சிலாகிப்பு ஆச்சர்யமாய் இருக்கிறது. கோணங்கியின் கதை சொல்லிக்கான அடையாளங்கள் அவரின் மதினிமார்களின் கதை  அதிகம் பேசப்பட்டது என்று நினைவு. நிறைய பேர் எழுதுகிறார்கள் இப்போது தென் மாவட்டங்களில் இருந்து. திருநெல்வேலி சைவ பிள்ளைமார்களின் கையில் இருந்து மதுரை, இராமனாதபுரம், விருதுநகர் என்று தென் கிழக்கு மாவட்டங்களுக்கு மாறியது கி.ரா வின் வரவுக்கு அப்புறம் என்று இருக்கலாம். சாத்தூர், கோவில்பட்டி, விருதுநகர், மல்லாங்கிணறு உட்பட இன்ன பிற ஊர்களில் இருந்தும் இலக்கியம் வியர்வையையும், புழுதியையும், மனிதர்களையும் மேலும் மனிதர்களையும் தன்னுடைய கதைக்களமாய், கதை மாந்தர்களாய் உள்கிரஹிக்க ஆரம்பித்தது. பொதுவாகவே வேளாண்மையை தொழிலாய் கொண்ட சமூகம் கதை சொல்வதில், கதை வாசிப்பதில், கதை வளர்ப்பதில், கதை கேட்பதில் நேரம் செலவிட கை நிறைய சந்தர்ப்பங்கள், சம்பவங்கள் வைத்திருந்ததன் காரணங்களாக இருக்கலாம் இது போல கதை சொல்லிகள் வந்ததற்கு. கி.ரா., கு.அழகிரிசாமி, வண்ணதாசன், வண்ணநிலவன், மேலாண்மை பொன்னுசாமி, பெருமாள் முருகன், நாஞ்சில் நாடன், கோணங்கி என்று பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.

எனக்கு கதைசொல்லிகள் என்ற concept என்னவென்று தெரியும் முன்பாகவே, சில கதை சொல்லிகள் சுவாரசியமாய் இருந்திருக்கிறார்கள். நான் எட்டாவது படிக்கும் வரை அழகர்சாமி நாயுடு காம்பவுண்டில் தான் இருந்தோம் என்பது உனக்கு சொன்னதாக ஞாபகம் என்று நினைக்கிறேன். அங்கு முத்தையா ஆசாரி தவிர மற்ற எல்லார் வீட்டு ஆண்களும் ஒரு அரசாங்க உத்யோகத்தில் அல்லது ஏதோ ஒரு ஆபிஸ் உத்யோகத்தில் இருந்ததால் வார நாட்களின் பகல் நேரம் அவர்களை அறியாமல் இருந்தது. காலை 11 மணி காட்சிக்கு ஒரு கும்பல் மீனாட்சி தியேட்டருக்கோ அல்லது நியூசினிமாவுக்கு செல்வதுண்டு, இவர்கள் கணவருக்கு தெரியாமல் சென்றது மாத்திரமே அதிகம். இவற்றுள் நமக்கு முக்கியமானவர் கொட்டாம்பட்டி ரேணுகா மாத்திரமே (எங்கள் காம்பவுண்டில் இரண்டு ரேணுகாக்கள் உண்டு, அடையாள அங்கதத்திற்காகவும், சம்பாஷனைளுக்காகவும் அவர்களை ஊர் பெயருடன் சேர்த்து குறிப்பது வழக்கம்., ஒருவர் காட்டூரணி ரேணுகா நம்மவர் கொட்டாம்பட்டி ரேணுகா) ரேணுகாக்கா ஒரு சினிமா பார்த்து விட்டு வந்தால் காம்பவுண்டில் உள்ள என்னைப் போன்ற கதை விரும்பிகள், கேட்பாளர்களுக்கு கொண்டாட்டம். பின்மாலை சுமார் 7 மணிக்கு கதை சொல்ல ஆரம்பித்தால் 2 மணி நேரம் வரை செல்லும், பரீட்சை நேரங்களில் ரேணுகாக்கா கண்டிப்பாக கதை சொல்லுவதில்லை, ரேணுகாக்கா கதை சொன்னா அந்த படம் பார்க்கிறதை விட சுவாரசியமாக இருக்கும். அந்தக்கா கதை சொல்லும் போது அவருடன் படம் பார்த்தவர்கள் கூட திரும்ப வந்து உட்கார்ந்து கதை கேட்பதுண்டு. ஒரு சினிமாவின் அத்தனை கனபரிமானங்களையும் தனது குரல், கண்கள், கைகள், உடலசைவு மூலம் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விடுவார். என்னுடைய மறக்க முடியாத அனுபவம் ஜகன் மோகினி கதை கேட்டு காய்ச்சல் வந்து அனத்தினது தான். விட்டலாச்சரியா தூவ மறந்த அத்தனை மசாலாக்களும், அதன் திடுக்கிடலுடன் இருந்த்து. அதன் பிறகு அதே படத்தை நான் தியேட்டரில் பார்க்கும் போது எனக்கு ஒரு நல்ல நகைச்சுவை படத்தை பார்த்தமாதிரி தான் இருந்ததே ஒழிய ஒரு பேய்ப்படம் பார்த்த மாதிரி இல்லை.

பேய்பற்றிய கதைகள், பார்த்த, உணர்ந்த, கேட்ட கதைகள் பற்றி கதையாய் சொல்லும் போதும் எல்லோரையும், கட்டிப்போட, வாய்பிளந்து ஏன் என்று கேள்வி கேட்காமல் அது எப்படி நடக்கும் என்ற ஒரு புத்தியும் இல்லாமல் சுவாரசியமாக கதை கேட்போம் அலுப்பே தட்டாமல்.

எதிர் வீட்டு ஜெயாத்தைக்கு பேய் பிடித்த போது எல்லா பெண்களும் பயந்து வீட்டை விட்டு வெளிவருவதில்லை. என் அம்மா, பெத்தம்மா, நாகத்தை, மாலாக்கா, தனம், அமுதாம்மா என்று யாரும் போவதில்லை. ஜெயாத்தையின் அக்கா யசோதாத்தையும், தாயம்மா கிழவியும், எதிர் காம்பவுண்டு சுப்பக்காவும், பேய் ஓட்ட வந்த மந்திரவாதியும் (சிவகங்கையில் இருந்து பேய் ஓட்ட வந்தார்… பஸ் சார்ஜும், சாவலும், 5 ரூபாயும் – (காணிக்கையாய் /காணிக்கைக்காய்) மட்டுமே இருப்பார்கள். இந்த பேய் பிடித்த கதை கூட ரேணுகாக்கா சொல்ல கேட்டுத் தான் தெரியும் எங்களுக்கு. ஜெயாத்தை எங்களுக்கு நிறைய விபரம் தெரிந்து கேள்வி கேட்பதற்கு முன்பாகவே இறந்து விட்டார். ஆனால் அவர்கள் இறந்து போனது Brain Tumour-ல் பிச்சம் மாமா ஜெயாத்தை ரெண்டு பேருக்கும் குழந்தை கிடையாது. ஓரளவு படித்த மத்திய அரசாங்கத்தில் வேலை செய்யும் ஒருவர் தன் மனைவியை பேய் பிடித்ததாக பிறர் கூறும் கூற்றை நம்பி அதற்கு மந்திர, தந்திர, மாந்திரீகத்தில் சரி பண்ண ஒப்புக்கொண்டது ஆச்சர்யமாயிருக்கும். ஆனால் உடல் பெருத்த ஜெயாத்தை மேல் ப்ரியம் குறைந்து விதி வசத்தால் மனைவி இறந்து விட்டாள் என்ற ஒரு தோற்றத்தை உண்டு பண்ணி ஜெயாத்தையை கொஞ்சம் கொஞ்சமாக கொன்தோ என்று கூடத் தோன்றும் சில சமயம்.

எனக்கு இப்போது சரியாக ஞாபகம் இல்லை, நீ பாட்டி வீட்டில் 2 வருடங்கள் படித்திருப்பாய் என்று நினைக்கிறேன். திலகம் பின்னி திருமணத்தின் பிறகு, பாட்டிக்கு துனையாகவோ அல்லது உன் தொல்லை தாங்க முடியாமலோ உன்னை மல்லாங்கினறு சென்று படிக்க அனுப்பியது (எந்த புத்திசாலியின் முடிவோ) எனக்கு தெரியலை, உனக்காவது தெரியுமா? நீ மல்லாங்கினறில் இருந்த சமயம் உன் வீட்டில் இரண்டு மூன்று முறை வீடு மாறி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். உனக்கு தெரியுமா? சுப்பிரமணியபுரத்தில் ஒரு வீட்டிலும் இருந்தார்கள்.

உன் வீடுகளில் எனக்கு நிறைய ஞாபகத்தில் இருப்பது போலீஸ் லைன் வீடு, ஆண்டாள்புரம் வீடு, சுந்தரராஜபுரம் வீடும் தான். ஆண்டாள்புரம் வீட்டில் இருந்த போது தான் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தீர்கள், நீயும், உன் அக்காவும். உங்கள் வீட்டில் மட்டும் தான் நீங்கள் போலீஸ் லைனில் இருந்த காலம் முதலே கல்கண்டு புத்தகம் வாங்குவீர்கள். குமுதமும் வாங்கினாலும், கல்கண்டு வாங்குவது எனக்கு அபூர்வமாய்த் தோன்றும். நிறைய வீடுகளில் குமுதம், விகடன் வாங்குவார்கள். ஆனால் கல்கண்டு மிக அரிது. ராண்டார் கை, தமிழ்வாணன், லேனா தமிழ்வாணன் என்று அறிமுகப்படுத்தியது நீங்கள் தான்.

ஆண்டாள்புரத்தில் இருந்த போது தான் என்னை EB மலைக்கு கூட்டிச்சென்றீர்கள். சுவற்றில் டார்ச் அடித்து ஸ்லைடு காட்டியது, ஜெயராம், ஜெயலட்சுமியின் திருவிளையாடல்கள் அங்குதான் அரங்கேறியது. அப்போது குமுதத்தில் வந்த ஒரு சுஜாதாவின் தொடர்கதை பற்றி அதிகம் பேசுவீர்கள் (பிரிவோம் சந்திப்போம் அல்லது நிறமற்ற வான்வில்லோ ஞாபகம் இல்லை) எனக்கு சுஜாதாவை எப்படித்தான் படிக்கிறார்களோ என்று தோன்றும். நானும் ஜெயந்தியும் அப்போது படிப்பது, சண்டைபோடுவது எல்லாமே அம்புலிமாமா, பாலமித்ரா, தினமணி கதிருக்காகவும் தான் இருக்கும். விகடனின் அறிமுகம் இருந்தாலும் எனக்கு தொடர்கதை படிக்க பிடிக்காது, ஜெயந்தி தான் படித்துவிட்டு சில சமயம் கதை சொல்வாள். நீயும் கிரிஜாவும் பூவிலங்கு படம் பார்த்துவிட்டு வந்து கதை சொல்லியது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. எல்லோரையும் விட உன் வீட்டில் அதிகம் பழகியது புழங்கியது நானாகத் தான் இருக்கும்… எனக்கும் உங்கள் வீடு மாத்திரமே…


லதா, விஜி, பாபு எப்போதும் விருந்தினர்கள் போல் தான் படும் எனக்கு… உனக்கு எப்படியோ? நமக்கு இருவருக்குமான அடையாளம் ஒன்றாய்த்தான் இருக்கும் அப்போதைய நாட்களில்…சீனி-மணி என்று தான் எப்போதும் ஒன்றாய் விளையாடிய, விளையாடத் துடித்த, ஆவலாய் அறியத்துடித்த வயதுகளில் ஒரு குறியீடாய் இருந்ததாக நினைக்கிறேன். எல்லா இடங்களிலும், நாம் பேச, பழக, ரகசியமாய் பேசி சிரிக்க பெண்கள் இருந்திருக்கிறார்கள். நாம் அதிகம் சினேகமானது கொக்கொக ரகசியங்களை, கதைகளை, கதை நாயகிகளை பேசிப் புணர்ந்த போது தான். உனக்குத் தனியாகவும் எனக்கு தனியாகவும் நிறைய சினேகங்கள் இருந்தாலும் உனக்கும் எனக்குமான நட்பு எதிலும் வகைப்படுத்தமுடியாமல் ஒரு தினுசாய் புதிதாய் குடி புகுந்த வீட்டுக்கருகில் வசிக்கும் ஒரு அழகான சினேகமான சமைந்த குமரியைப் போல.

ஊழிப்பெருந்தீ....


என்னை
கொளுத்தி கொள்வதாய்
முடிவு செய்தேன்

உடையில்
தான் முதலில்
பற்ற வைத்தேன்
பற்றி படர வசதியாய்
லுங்கி அணிந்திருந்தேன்

கெண்டைக்கால், ஆடுசதை
தொடையின்
கொழுப்பு ஆகுதியில்
நெய் வார்த்தது...

மெதுவாய்
வளர்ந்து மேலேறியது
புற உடல் தின்று
உட்புகுந்து
உள்ளும் படர்ந்தது

கேசம் எரிவதில்
குடலை பிடுங்கும்
நாற்றம் எடுத்ததாக
அயலார் கூறக்கூடும்

பற்றிஎரிந்ததில்
முதலில்
 நிர்வாணம் அழிந்தது

ஆதிமரணம்
தன் கிரணங்களை
பாய்ச்சி உயிரை
வெளுக்க செய்தது

நான் நானற்று
கரிகட்டையாய் கிடக்கிறேன்

(இந்த கவிதை உயிரோசை மின் இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துக் கொள்கிறேன்)

Monday, September 14, 2009

அற்றது பற்றெனின்...

உறுப்புகளற்று
அம்மனமாய்
விழுந்துகிடந்தேன்
உன் மனப்புழுதியில்
அடையாளங்கள் ஏதுமற்று

பின் மண்டை
பிளந்து
மூளை அடுக்குகளுக்குள்
செருகிய நினைவுகளில்
”என் பெயர்
இல்லை”,
தூர எறி!

மயிர் முளைக்கும்
சத்தம்
மனம் அரற்றும்
ஒலி
செவிகள் தேவையில்லை
திருகிக் களை!

கோரைப்பல்
கொடும்பகை
குடல் கிழிக்கும்
குறுஞ்சிரிப்பு
ஆக மொத்தம் காணும்
கண்களை பிடுங்கு!

இலக்கியம்
தத்துவம்
இஸங்கள் ஏதுமின்றி
இயன்றவரை உண்மை
வாய்பூட்டு!
சாவி தொலை!

விந்து நிறைந்து
கனத்து தொங்கும்
விரைப்பை
கழற்றி வை!

யோனி உட்புக
உன் குறியை
மட்டும் விட்டு வை!

Thursday, September 10, 2009

வீரலட்சுமி தியேட்டரும் விவேக சிந்தாமணியும்


கல்லூரியில் அப்போது நாங்கள் பி.காம் முதல் வருடம் படித்து கொண்டு இருந்தோம். முதல் முறையாக செமஸ்டர் எழுதுவதால் எங்களுக்கு அதை எதிர் கொள்வதற்கு இரவில் காலேஜ் கிரௌண்டில் சேர்ந்து படிக்க முடிவு செய்தோம். அது போல் படிக்கும் கோஷ்டியில் அநியாயமாக நானும் இருந்தேன். படிப்பை தவிர பாடங்களை தவிர இன்ன பிற விஷயங்களை தெளிவாக பேசுவோம். இதில் நான், குருமூர்த்தி, பி.எஸ்சி கெமிஸ்ட்ரி படிக்கும் கோச் சரவணன், பிசிக்ஸ் கார்த்தி, எப்போதாவது மணிவண்ணன், கரிசல்குளம் கார்த்தி, டி ஆர் ஒ காலனியில் இருந்து சங்கர், எல்லீஸ் நகர் ராதாகிருஷ்ணன், டோபர் என்கிற கிறிஸ்டோபர், மாப்பாளயம் இப்ராகிம் எல்லோரும் கூடி படிப்பதாக கதை பண்ணி கொண்டு.. இரவு முழுதும்  கொட்டம் அடிப்போம். 
கையில் இருக்கும் சில்லறைகளை திரட்டி எல்லோரும் ஜெய்ஹிந்த்புரம் இரண்டாவது மெயின் ரோடில் இருக்கும் மதுரை முனியாண்டி விலாஸ் புரோட்டா கடையில் இரவு உணவை முடித்து கொண்டு...காலேஜ் கிரௌண்டுக்கு திரும்புவோம்.  பாலிடெக்னிக் பக்கத்துக்கு தெருவில் நுழைந்து தான்  ஜெய்ஹிந்த்புரம் இரண்டாவது மெயின் ரோட்டுக்கு செல்ல வேண்டும்.  அந்த ரோட்டில் நிறைய சினிமா தியேட்டர்களின் போஸ்டர்  ஒட்ட பாலிடெக்னிக் சுவர் வாகாய் தன் முதுகை காட்டி கொண்டு நின்றிருக்கும். முருகன் தியேட்டர், ஜெகதா தியேட்டர், நடராஜ், மது தியேட்டர்கள் என்று பல தியேட்டர்களின் போஸ்டர்கள் அங்கு தான் சங்கமம் ஆகும். மது தியேட்டர்களில் எப்போதும் பக்தி படங்கள் போடுவது தான் வழக்கம்.  அன்றும் எண்டே காமுகியில் பழைய நடிகை பிரமீளா பிரா கொக்கியை கழட்ட முயல்வது போன்ற போஸ்டரை பார்த்தவுடன் பயகளுக்கு பக்தி படம் பக்கம் பேச்சு திரும்பியது. எங்களில் அதிகம் சினிமா பார்க்கும், அதிக கற்பனைத்திறன் உள்ள டோபர் எப்போதுமே போஸ்டர் பார்த்தவுடன் கதை சொல்லி விடுவான் எந்த மொழியாக இருந்தாலும்... தன் அனுபவத்தில் இது போன்ற படங்களில் ஒரு சீன் கூட இருக்காதுடா மாப்ள!மிஞ்சி மிஞ்சி போனா பைய மட்டும் தான் காட்டுவாய்ங்க!  (பை என்று குறிப்பிடுவது எதுவென்று தெரிந்திருக்கும் உங்களுக்கு)...என்று அதிகம் உணர்சிவசபட்டிருந்த கார்த்தியிடம் சொன்னான். 

எங்கள் எல்லோருக்குமே இது போன்ற ஒரு படத்தை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்ற ஆவலாதி அதிகமானது..கொக்கோக புத்தகங்களும், சரோஜாதேவிகளும் போதுமானதாய் இல்லை, அதனால் இந்த செமஸ்டர் முடிந்தவுடன் நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு பக்தி படம் பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்தோம்.  டி ஆர் ஓ காலனி சங்கர், மூனுமாவடி தாண்டி இதற்காக ஒரு டூரிங் தியேட்டர் இருப்பதாகவும், அதில் போடும் பக்திப் படங்களில் உத்திரவாதமா இரண்டு சீனாவது இருக்கும் என்று உறுதி அளிக்க நாங்கள் எல்லோரும், கடைசி பரீட்சை முடிந்ததும் போவதாக முடிவு எடுத்தோம்.. தூரம் ஒரு பெரிய கவலையாய் இருந்தது...மதுரையில் இருந்து ஒரு 16 கி.மீ. இருக்கலாம், ஆனாலும் சைக்கிளில் போய் விடலாம் என்ற டோபரின் யோசனை எங்களுக்கு சரியென பட்டது.. வர்த்தக பொருளாதாரம் பரீட்சை வரும் நாளுக்காய் காத்திருந்தோம்..பரீட்சை நாளும் வந்தது, என்ன எழுதினோம் என்று பெரிதாக அக்கறை இல்லை. பரீட்சை ஹாலை விட்டு வந்ததும் எங்கள் கோஷ்டி மட்டும் பிரிந்து வர்த்தக பொருளாதாரம் பற்றி அல்லாது... பக்தி படம் பார்க்க உண்டான ஏற்பாடுகளில் ரகசியமாய் அலைந்தது... எல்லோரும் பரீட்சை ஹாலை விட்டு சீக்கிரமாக வந்தது போல் தோன்றியது..

எல்லோரும் கொண்டு வந்த பணத்தை பொருளாதாரத்தில் நிபுணனான குருமூர்த்தியிடம் கொடுத்தோம்.. மொத்தம் நூற்றி அறுபது ருபாய் கலெக்க்ஷன் ஆனது. தியேட்டரில் என்ன படம் என்று கூடத் தெரியாது... போகும்போது சாப்டுட்டு போகலாம், சைக்கிள் மிதிக்க தெம்பு வேணும் என்று, ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் பஸ் ஸ்டாண்டிற்கு எதிரில் உள்ள வசந்தம் ரெஸ்டாரன்டில் ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டு விட்டு கிளம்பலாம் என்ற ராதாகிருஷ்ணனின் முடிவில் யாருக்கும் ஆட்சேபம் இருக்கவில்லை.  என்னிடம் சைக்கிள் இல்லாததால் நான் குருமூர்த்தியின் சைக்கிளில் வழக்கம் போல் ஏறி கொண்டேன், நான் எப்போதுமே குருமூர்த்தியின் சைக்கிளில் வருவது தான் வழக்கம் அதற்கு காரணம் அவன் என் வீட்டிற்கு அருகில் இருப்பதால் கூட இருக்கலாம், என்னுடைய எல்லா ஊர் சுற்றும் தேவைகளையும் குருமூர்த்தியும் அவன் சைக்கிளும் பார்த்துக் கொண்டனர்... சைக்கிளுக்கு டிரைவர் வச்சிருக்கிற ஒரே ஆள் நீ தாண்டா! என்று கரிசல்குளம் கார்த்தி அடிக்கடி கிண்டலாய்ச் சொல்வதுண்டு... ஆக எல்லோரும் விரைவாக மிதிவண்டியை மாற்றி மாற்றி மிதித்து வசந்தம் ரெஸ்டாரன்டில் நுழைந்தோம்..11 பேருக்கு 8 ரூபாய் ஒரு மீல்ஸ் என்ற கணக்கில் 88 ரூபாயும் 2 ரூபாய் டிப்ஸும் போக மிச்சம் சினிமாவுக்கு போதுமானதாய் இருக்கும், 20 நிமிஷத்துக்கு மேல நேரம் எடுக்க கூடாது, லேட்டா போனா படம் போட்டுடுவான்னு மிரட்ட எல்லோரும் அவசரமாய் சாப்பிட்டு முடித்தோம்.. டபுள் பெடல் போட்டு முனுமாவடியை நோக்கி ரெக்கை கட்டி பறந்தது சைக்கிள்கள். கே. புதூரையும் தாண்டி போக வேண்டும் மூனு மாவடிக்கு, கொசவாகுளம் புதூரை நான் இதுவரை தாண்டியதில்லை, என் அத்தை பெண்ணுக்கு கல்யாணம் ஆகி அவள் புதூரில் தான் குடியிருந்தாள், 4 வருசத்துக்கும் முன்னால் தான் இந்த பக்கம் வந்தது, அதன் பிறகு இப்போது தான் வருகிறேன்.

என்ன படம்னு கூட தெரியாது... ஆனாலும் பெயர் முக்கியமாய் படவில்லை யாருக்கும்.. பெயராடா முக்கியம்னு... பாஷையும், பெயரும் இதற்கு தேவையில்லை என்று ராமானுஜன் மாதிரி பதில் சொன்னான், இப்ராகிம். கொசவாகுளம் புதூரையும் தாண்டி ஒரு 4 கிலோ மீட்டரில் இடது பக்கம் சடாரென்று திரும்பி நகரம் தின்று துப்பிய ஒரு வயல்காட்டுக்குள் சங்கர் எங்களை வழிநடத்த நாங்களும் ஒரு அட்வென்ச்சர் ரேஞ்சுக்கு பின் சென்றோம்.. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ஒவ்வொருவரிடமும்.. அதைப்பற்றியே அது சம்பந்தமான அனுபவங்களின் விவரிப்பு மாத்திரமே வழியெங்கும் வயலெங்கும் விதைத்து கடந்தோம்.. அதோ தெரியுது பாருங்க அதான் வீரலட்சுமி தியேட்டர், அப்போது தான் அந்த தியேட்டரின் பெயரே தெரிந்தது... நிறைய பெரிசுகள், தலையில் முண்டாசு கட்டி கொண்டு வயலுக்கு வேலைக்கு போவது போல் தியேட்டரை நோக்கி சென்று கொண்டு இருந்தார்கள்.. தியேட்டரை நெருங்கியவுடன் தான் தெரிந்தது... மதுரையே திரண்டு வந்தது போல சைக்கிள்கள்,  டிவிஎஸ் 50, M80 என்று ஏகப்பட்ட வண்டிகள் எல்லோருமே மதுரையில் இருந்தும் சுற்றுப்புற ஊரிகளில் இருந்தும் வந்து இருக்க வேண்டும்.. அவ்வளவு பிரபலமான தியேட்டரா இது என்று எங்கள் எல்லோருக்கு ஆச்சரியம். 

எங்களைபோலவே நிறைய பள்ளி கல்லூரி மாணவர்கள், யுனிபார்மிலும் இருந்ததாக ஞாபகம்.  எங்களுடைய சீனியர்களும் தியேட்டருக்குள் இருக்க, கைகுலுக்கி நட்பானோம்.  அப்போது தான் கவனித்தோம் என்ன படம் என்று... உர்சுலா ஆன்ட்ருஸ் நடித்த லோடட் கன்ஸ் என்ற ஆங்கில படம்... உர்சுலா வெள்ளைவுடையில் அரைகுறையாய் தெரிய எனக்கு லேசா காய்ச்சல் வரமாதிரி இருந்தது..ராதாகிருஷ்ணன் உடனே உர்சுலா ஆன்ட்ருஸ் நடித்த இன்ன பிற படங்களை பட்டியல் இட்டு கதை சொல்ல ஆரம்பிக்க...அவனை அடக்கி எல்லோரும் டிக்கட் கௌண்டரை நோக்கி ஓடினோம். குருமூர்த்தி எல்லோருக்கும் ஆறு ரூபாய் டிக்கட் எடுக்கலாம், அது தான் ஹை கிளாஸ் டிக்கட் போல... என்று கொஞ்சம் சில்லறைகளை இன்டர்வெல்லில் கொறிக்க உதவும் என்று பத்திர படுத்தினான்.  தகர சீட்டில் வேயப்பட்ட கூரை,  பெரிய சாக்கு துணிகளே திரைகளாய் தொங்கி கொண்டு இருந்தது ஏகப்பட்ட வெளிச்சப்பொத்தல்களுடன்... 6 ரூபாய்க்கு வாங்கிய டிக்கட்டிற்கு 2 ரூபாய்ன்னு போட்டிருந்த டிக்கெட்டை கவுண்ட்டர்க்காரன் கொடுத்தான்.. குருமூர்த்தி என்னவென்று நியாயம் கேட்க வேணுமா வேணாமா என்று கேட்க... டேய்! நாங்க என்ன கணக்கா கேட்க போர்றம் பேசாம வாங்கிட்டு வாடான்னு கார்த்தி சொல்ல அவனும் முனகி கொண்டே வாங்கினான்... திரை விலக்கி தியேட்டருக்குள் நுழைந்த போது மெத்தென்று ஆத்து மணலில் கால் வைத்து இறங்கினோம், ஹை கிளாஸ் டிக்கெட்டுக்கு ஆத்துமணலில் மடக்கு சேர் தான் சீட். 3 ரூபாய் டிக்கெட்டில் வெறும் ஆத்துமணல் மாத்திரமே. ஆண் பெண் என்று எந்த பிரிவும் அந்த தியேட்டரில் இருக்கவில்லை. வேறு மாதிரி படங்களே அங்கு போடுவதில்லை போல. உள்ளே நுழைந்ததும் யாரோ ஒருவரின் கனவுக்குள் வந்து விட்டது போல, எங்கும் புகைமண்டலம், தியேட்டரே பற்றி எரிவது மாதிரி அநேகமானோர் பீடியோ, சிகரெட்டோ தத்தமது வசதிக்கு ஏற்ப பிடித்து கொண்டு இருமி கொண்டும், காறி துப்பிகொண்டும் இருந்தனர்.   மணல் எல்லாவற்றுக்கும் ஏதுவாய் இருந்தது... எல்லோரும் இருக்கை தடவி உணர்ந்து அமர்ந்த போது, விளம்பரத்தில் குழந்தை இரும அம்மா நெஞ்சில் விக்ஸ் தடவினாள், ஊய்! என்று சீழ்க்கை ஒலி காதைப் பிளந்தது, ஏய்! ஆப்பரேட்டர் படத்தை போடு என்று ரசிகர்கள்(?) திரும்பி ஒளித்துளைகளை பார்த்து கத்த, படம் இனிதே ஆரம்பித்தது...

நிறைய நெஞ்சு கோர்த்த சளியுடனும், ஏகப்பட்ட கீறல்களுடனும் ஒலி, ஒளி காட்சி நூற்றாண்டு பழைமையான பிலிமில் யாரையோ துப்பாக்கியுடன் துரத்தி ஓட, தியேட்டரே அமைதியாய் அந்த நேரத்திற்காய் காத்திருந்தது.. சம்பந்தமே இல்லாமல் யாரோ ஒரு கருப்பழகி முன் பக்க அழகை காட்டி ஹைவேயில் வண்டியை நிறுத்த...காரோட்டி ஓரமாய் நிறுத்தி சல்லாபித்தான், எங்கிருந்தோ மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு ஜெர்கின் அணிந்த பெண், காரோட்டியை சுட.. என்ன நடக்கப் போகிறது என்று எல்லோரும் விழிப்புடன் கவனிக்க, திடீரென்று கருப்பு வெள்ளையில் மாறிய படத்தில் ஒரு அரைகுறை புணர்ச்சி சமபந்தமே இல்லாத பின்னணி இசை அபத்தமாக அவர்களின் விரக ஓசைகளை தின்று கொண்டு இருந்தது, யாரோ கூட்டத்தில், தொட்டி! சிமிண்ட்டு தொட்டி!! என்று கத்த, தியேட்டரே ஒரு வினோத ரசக்கலவையுடன் இருந்தது. ஒரு கற்பழிப்பு முயற்சி, ஒரு குளியல் காட்சியில் முதிர் கன்னி சோப்பை கரைக்க என்று நொடிக்கொரு காட்சி மாறி அரை மணியில் இன்டர்வெல் விடப்பட்டது... இன்டர்வெல்லின் போது தியேட்டர் மொத்தமும், வேறு ஏதோ அவசர ஜோலி இருப்பது போல் குண்டி மண்ண தட்டிட்டு கிளம்ப, தியேட்டரே காலியாகி விட்டது... சங்கர் எல்லோரையும் பார்த்து அவ்வளவு தான்.. இனிமே ஒன்னும் காட்ட மாட்டாய்ங்க என்று  சொல்ல...யாருக்கும் மனமில்லாமல் இருங்கடா!முழுசா பாத்துட்டு போயிரலாம்னு ராதா சொல்ல, எல்லோரும் முட்டை போண்டா, முறுக்குடன் காத்திருக்க, திரை ஒளி பெற்று உர்சுலா யாரையோ கட்டி வைத்து உதைக்க, கிழிந்த உடையில் அவளுடைய ஒரு பக்க மார் தெரிய அக்கறையில்லாமல் அவனை அடிப்பதிலேயெ குறியாய் இருக்க, ஒரு பாம் வெடித்து பத்து நிமிடத்தில் படமே முடிந்தது. கையில் இன்னும் முட்டை போண்டாவும், முறுக்கும் மிச்சம் இருக்க, யாரை நோவது என்று தெரியாமல் எழுந்தோம். இதுக்கு ராஜா தியேட்டரே பரவாயில்லை என்று சங்கரை எல்லோரும் உக்கிரமாய் முறைக்க, அவனும் அவன் தியேட்டர் ஓனர் போல குற்ற உணர்ச்சியுடன் நின்றான். பெருமூச்சில் ஒரு பெரிய அங்கலாய்ப்புடன் வெளியே வந்தோம்... சங்கர் தன்னால நடந்த தவறுக்கு வருந்தி அடுத்த வாரம் அவனுடைய அப்பா அம்மா ஊருக்கு போவதாகவும் அப்போ வீட்லேயே கேசட் போடலாம் என்றும் கூற... எல்லோரும் அதில் சந்தோஷித்து.. அந்த நாளுக்காய் காத்திருந்தோம்...

Wednesday, September 9, 2009

பாசுரங்கள் - ஒரு புதுக்கவிதை முயற்சி....

(தமிழ் கூறும் நல்லுலகம் என்னை வைகுண்டம் ஏக சபிக்காதிருக்கட்டும்...)





சிறு கத்தி
கொண்டு
உடலின் குறுக்காய் கிழித்து
சுட்டும்
சொஸ்தபடுத்தும்
ஒரு தேர்ந்த
அறுவை சிகிச்சையாளனாய்...
உன் மாயங்கள்,
தந்திரங்கள்,
துன்புறுத்தும்...
இருந்தும் கூட
முன்னவனை போல்
உன்னை
நேசிக்கிறேன்....
------------------------------------------பெரியாழ்வார்
(2)
மண்ணை
தோண்டி மண்ணில்
துழாவி
வாமனன் மண் இது
என்று பிதற்றும்

வானத்தைப்
பார்த்து
கைதூக்கி
வைகுண்டம் அதுவென்று
உளறும்

கண்ணில்
நீர் வழிய
கடல் பார்த்து
கண்ணன் என்று
கதறி
அவனை அழைக்கும்
என் மகளை
பித்தம் பிடிக்கச் செய்தவனை
என்ன செய்வது

---------------------------------------- நம்மாழ்வார்.





(3)
நடக்கும்போது
குடை
உட்கார
இருக்கை
நின்றால்
செருப்பு
படுக்கையில்
தெப்பம்
இரவில்
சிறு வெளிச்சம்
போர்வையும்
தலையணையும்
உறங்குகையில்

திருமாலுக்கு
பாம்பு…..

----------------------------------------பொய்கையாழ்வார்

Thursday, August 27, 2009

மூன்று கவிதைகள்

கவிதை (1)

கடவுளின்
கனவுகளில் ஒன்றை
திருடி
என் அலமாரிக்குள்
ஒளித்து வைக்கிறேன்

காணாது
தவிக்கும்
கடவுள்
மூளைக்குள்
விஷமேறி துடிக்கிறார்

ஜோதிமயமான
கடவுள்
காற்றுவெளியில்
சில்லிட்டுப்போய்
கருத்துப்போனார்

ஒளித்து வைத்த
கடவுளின்
கனவை
எடுத்துப்பார்க்கிறேன்

கடவுளின்
கடைவாயில்
பற்கள் முளைத்து
கோரக்குருதி
வழிகிறது

மீண்டும்
அலமாரிக்குள்
வைத்து
பூட்டிவிடுகிறேன்


கவிதை (2)

பத்து
வருடங்களுக்குப் பிறகு
கடிதம்
வந்தது
உன்னிடம் இருந்து

நிறைய
எழுதியிருந்தாய்...

நீயும் நானும்
விளையாடிய,
கதை பேசிய, கனவு விதைத்த
பொழுதுகளை...

நாம் தொடர்பற்று
இருந்த
நாட்களின்
சிறு குறிப்பும்
இல்லை
உன் கடிதத்தில்

மடித்து வைக்கிறேன்
உனக்கு பதிலாய்
நம் பழங்கதைகள் பேச...

கவிதை (3)

சொந்தமாய்
வீடு வாங்கி
குடிபுகுந்தேன்
ஒரு நகர அடுக்ககத்தில்..!

அப்பா
வந்திருந்தார் வீட்டுக்கு...

என் மகனிடம்
உங்க அப்பா
சின்ன குழந்தையாய்
இருந்த போது
சூரிய, சந்திர,
நட்சத்திரங்களுடன்
வானம் இருந்தது...

புழுதி அப்பிய
மண்ணும் இருந்தது...
மழை நனைக்கும்
தாழ்வாரம்
இருந்தது...

ஆனால்
சொந்த வீடு இல்லை

உன் அப்பாவிற்கு
சொந்த வீடு
இருக்கிறது....

பொய்யாய்
பழங்கதையாய்....

(எனது மேற்கண்ட 3 கவிதைகளும் நவீன விருட்சத்தின் பதிவுலகில் பிரசுரமாகியுள்ளது)

Wednesday, August 19, 2009

மொட்டபாற முனீஸ்வரன்....மல்லாங்கிணறு


மொட்டப்பாற முனீஸ்வரனுக்கு
நேர்ந்து விட்ட
வெள்ளாட்டங்குட்டி
காணாமப் போனதில்
பதறிப் போனா ஆத்தா…

சாமிகுத்தம் சடக்குன்னு தீர
ஈஸ்வரியம்மா சொல்ல
குறி கேட்ட உள்ளூர் கோடங்கியும்

சாவலும் சாராயமும்
படையலுக்கு வைச்சா..
கருப்பு காட்டிக் கொடுப்பான்னு…

கோடங்கி மேல
ஏறி வந்த கருப்பும்
மனசெறங்கி
ஏலாம் நாள்ல
வாசக்கால் வரும்னு….

வாரம் கடந்து போச்சு…

மய்க்கா நாளே
மிளகியும் வந்து நின்னா…
வாசலிலே
அத்த! அம்மா கறிக்குழம்பு
குடுத்தாகன்னு….

Tuesday, August 18, 2009

பிறழ்வு...

தவனைக்கார முருகனை
அண்ணே! என்று
தனியே இருக்கையில்
தவறுக்கு ஒதுங்குவாள்
அகல்யா அக்கா…

மர்ஃபி ரேடியோ,
மயக்கும் செண்ட்,
மஸ்லின் துணி ரவிக்கை
என்று கல்யானத்திற்கு
களவுப்பொருள்
சேர்ப்பாள்

சைக்கிள் மணிச்சத்ததில்
சங்கேத பாஷைகள்
கொலுசொலிக்கு
புரிந்து போகும்
பண்டமாற்று அரங்கேறும்
முன்மாலைப்பொழுதுகளில்
பழம்புடவை பட்டுகளாய்,
பழங்கதைகள்
நிகழ்கனவாய்,
கறைகளும் வண்ணங்களாய்..

வடித்த சோறு
வட்டியில்
உறித்த கோழி
அடுப்பினில்
ஞாயிறு விருந்துகளில்
செரிக்க வெற்றிலை தேடும்
உறவு

இன்னும் சில....

நானற்று..

என்னுடைய
கவிதைகளில்
நானில்லாமல்
இருக்க
எப்போதும் மெனக்கெடுகிறேன்….

யாருடைய
வரிகளையோ
தெரிவு செய்து
அதை அடுக்கி உயர
கோபுரமாய் ஆக்குகிறேன்

பிறர்
உணர்வுகளில்
முலாம் தடவி
அவைகளை
நெட்டி பொம்மைகளாய்
நிறுவுகிறேன்

சொற்களின்
வீர்யத்தை, வீச்சைக் குறைத்து
என் வர்னங்களை
முற்றிலுமாக அழிக்கிறேன்

சரியாமல் இருக்க
உங்களின்
சுவாரசியங்களை
அனுபவங்களை
வஜ்ரமாய்க் கொண்டு
உறுதி செய்கிறேன்

கவனமாய்
செய்தாலும்
என் கைரேகைகள்
மிச்சமாகின்றன..

இந்த கவிதையிலும் கூட

கவிதைகள்

பிரிய சிநேகிதிக்கு...

இலக்கியவாதிக்கான
எந்த
அடையாளாங்களும்
இல்லை எனக்கு

விடிய விடிய
பீடி வலிப்பதிலும்
பேச்சு சுவாரசியத்திலும்
கழிவதில்லை
பொழுதுகள்

கிழக்கு, மேற்கு
வடக்கு, தெற்கு என்று
திசைகள் எங்கும் அலைந்து
மொழி பெயர்ப்பில்,
மொழி மாற்றத்து இலக்கியங்களில்
பரிச்சயம் இல்லை
எனக்கு

தமிழில் எழுதும்
சிலரைத் தவிர
வேறு எவர் பெயரும்
அறியாதிருக்கிறேன்..

அந்நிய திரைப்படங்கள்
இசை, புத்தகங்கள்
எதிலும் ஆர்வமில்லை எனக்கு
அந்நியப்பெயரில் யாரையும்
எதையும்
தெரியாது எனக்கு

கையில்
காசே இல்லாமல்
சாப்பாடு பற்றிய பிரக்ஞை இல்லாமல்
உடுத்திய உடையுடன்
ஊர் சுற்ற பழகியதில்லை

தேடிச்சென்று
பேர் பெற்ற இலக்கியவாதிகளை
சந்திக்க முயன்றதுமில்லை

நவீன இஸங்கள்
பின்முன் நவீனங்கள்
அமைப்பு சாரா சாரும்
இடம் வலம்
லத்தீன் கிரேக்க ருஷ்ய
தத்துவங்கள்
பாசிச, பூர்ஷ்வ, நாசிசம்
எதுவும்
பழகவில்லை

அகம், புறம்
குறுந்தொகை, கலித்தொகை
புலம் பெயர்ந்தவர்கள்
புரட்சி இலக்கியம்
மார்க்ஸ், எங்கல்ஸ்
பொருளாதாரம், அரசியல்,
தத்துவ சித்துகள்
எதுவும்
புரிவது இல்லை எனக்கு

பட்டறைகள்,
பாசறைகள்
கவியரங்கங்கள்
நிலாமுற்றம், பயிலரங்கு
விவாதமேடைகள்
கருத்துப்பெட்டகம், கனையாழி,
காலச்சுவடு, விருட்சம்
கவலையில்லை எனக்கு

உனக்கு
பிடித்தமாய்
உன்னைப்பற்றி
உன்னிடம் பேச
நிலா, மழை, வானவில்
பூக்கள், மலை, மேகம்
வாரமலர் கவிதைகள்,
இளையராஜா, பாலகுமாரன்
பாக்யராஜ், வைரமுத்து
குமுதம், விகடன்
என்று கதைபேச
வியப்பிலாழ்த்த!

அப்பா!
சீனுவுக்கு எவ்வளவு
தெரியுது
என்று
உன் புருவ உயர்த்தல்களும்
உதட்டுச் சுழிப்பும் போதும் எனக்கு…

இலக்கியவாதியாகும் ஆசை எப்போதும் இல்லை எனக்கு