கவிதை (1)
( நவீன விருட்சம் வலை இதழில் பிரசுரமாகியுள்ளது, கவிதை (1), நவீன விருட்சத்திற்கு நன்றிகள் பல...)
அலுவலகம்
செல்லும் வழியில்
அடிபட்டு
இறந்திருந்தது ஒரு செவலை நாய்
விரையும் வாகனங்களின்
குழப்பத்தில் சிக்கி
இறக்க நேரிட்டிருக்கலாம்
நாலைந்து நாட்களில்
தேய்ந்து கரைந்தது
இறந்த நாயின் உடல்
காக்கைகள் கொத்தி தின்ன
ஏதுவில்லை
வாகனங்கள்
நெடுகித் தொலையும்
பெருவழிச்சாலையில்
எப்போதும்
பிறரின் மரணங்கள்
ஒட்டியிருக்கிறது
நமது பயணத்தடங்களில்.
கவிதை (2)
உனக்கு பிடிப்பது
எனக்கு பிடிப்பதில்லை
எனக்கு பிடிப்பது
உனக்கும் அப்படியே
நமக்கு பிடித்திருந்தால்
மற்றவர்களுக்கு
பிடிப்பதில்லை எப்போதும்
எல்லோருக்கும்
பிடித்தது என்று
எதுவும் இல்லை
ஆனாலும்
நகர்கிறது
பிடிப்புடன் வாழ்க்கை
தாம்பத்தியம்
9 years ago
No comments:
Post a Comment