Tuesday, August 18, 2009

கவிதைகள்

பிரிய சிநேகிதிக்கு...

இலக்கியவாதிக்கான
எந்த
அடையாளாங்களும்
இல்லை எனக்கு

விடிய விடிய
பீடி வலிப்பதிலும்
பேச்சு சுவாரசியத்திலும்
கழிவதில்லை
பொழுதுகள்

கிழக்கு, மேற்கு
வடக்கு, தெற்கு என்று
திசைகள் எங்கும் அலைந்து
மொழி பெயர்ப்பில்,
மொழி மாற்றத்து இலக்கியங்களில்
பரிச்சயம் இல்லை
எனக்கு

தமிழில் எழுதும்
சிலரைத் தவிர
வேறு எவர் பெயரும்
அறியாதிருக்கிறேன்..

அந்நிய திரைப்படங்கள்
இசை, புத்தகங்கள்
எதிலும் ஆர்வமில்லை எனக்கு
அந்நியப்பெயரில் யாரையும்
எதையும்
தெரியாது எனக்கு

கையில்
காசே இல்லாமல்
சாப்பாடு பற்றிய பிரக்ஞை இல்லாமல்
உடுத்திய உடையுடன்
ஊர் சுற்ற பழகியதில்லை

தேடிச்சென்று
பேர் பெற்ற இலக்கியவாதிகளை
சந்திக்க முயன்றதுமில்லை

நவீன இஸங்கள்
பின்முன் நவீனங்கள்
அமைப்பு சாரா சாரும்
இடம் வலம்
லத்தீன் கிரேக்க ருஷ்ய
தத்துவங்கள்
பாசிச, பூர்ஷ்வ, நாசிசம்
எதுவும்
பழகவில்லை

அகம், புறம்
குறுந்தொகை, கலித்தொகை
புலம் பெயர்ந்தவர்கள்
புரட்சி இலக்கியம்
மார்க்ஸ், எங்கல்ஸ்
பொருளாதாரம், அரசியல்,
தத்துவ சித்துகள்
எதுவும்
புரிவது இல்லை எனக்கு

பட்டறைகள்,
பாசறைகள்
கவியரங்கங்கள்
நிலாமுற்றம், பயிலரங்கு
விவாதமேடைகள்
கருத்துப்பெட்டகம், கனையாழி,
காலச்சுவடு, விருட்சம்
கவலையில்லை எனக்கு

உனக்கு
பிடித்தமாய்
உன்னைப்பற்றி
உன்னிடம் பேச
நிலா, மழை, வானவில்
பூக்கள், மலை, மேகம்
வாரமலர் கவிதைகள்,
இளையராஜா, பாலகுமாரன்
பாக்யராஜ், வைரமுத்து
குமுதம், விகடன்
என்று கதைபேச
வியப்பிலாழ்த்த!

அப்பா!
சீனுவுக்கு எவ்வளவு
தெரியுது
என்று
உன் புருவ உயர்த்தல்களும்
உதட்டுச் சுழிப்பும் போதும் எனக்கு…

இலக்கியவாதியாகும் ஆசை எப்போதும் இல்லை எனக்கு

No comments:

Post a Comment